பசுமாடு இனிமே 'ராஜமாதா' என கருதப்படும்! மகாராஷ்டிரா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
மும்பை: பசு மாடு இனி ராஜமாதாவாக கருதப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்திருக்கிறது. அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே பசு மாட்டை வைத்து வட மாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட மகாராஷ்டிரா மாநிலத்தில், மாட்டிறைச்சி கடத்துவதாக முதியவர் ஒருவரை ரயிலில் வைத்து சிலர் தாக்கியிருந்தது பெரும் விவாதங்களாக மாறியிருந்தது. இப்படி இருக்கையில், மகாராஷ்டிரா மாநில அரசு பசுவை ராஜமாதாவாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அம்மாநில அரசு இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "பசுக்கள் இந்திய பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அங்கம். பழங்காலத்திலிருந்தே ஆன்மிகம், அறிவியல் மற்றும் இராணுவ துறையில் பசுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவகையாக பார்க்கப்படுகின்றன. நாடு முழுவதும் பல்வேறு வகையான மாடுகள் இருக்கின்றன. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக குறைந்து வருகிறது.
எனவே விவசாயிகள் நாட்டு மாடுகளை வளர்க்க அரசு ஊக்குவிக்கிறது. மாட்டு சாணத்தை விவசாயத்தில் பயன்படுத்துவதன் மூலம், நமது பிரதான உணவில் அதிக ஊட்டச்சத்து பெற முடியும். சமூக-பொருளாதார காரணிகளுடன் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு பசுக்கள் ராஜமாதாவாக அறிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில், பசுக்கள் அதிக அளவில் தெய்வமாக வணங்கப்படுகின்றன. பசுவின் கோமியம் புனித நீராகவும், அதன் சாணம் மற்றும் பால் புனிதம் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. பால் எனும் தேவையை கடந்து பல விஷயங்களில் பசுவை வட மாநில மக்கள் புனிதமாக பார்க்கின்றனர். இப்படி இருக்கையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் இந்த அறிவிப்பு அம்மாநில அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கான அரசியல் காரணங்களை பொறுத்த அளவில், பாஜக அரசு தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ளும் விதமாக பசு அரசியலை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணி கடுமையான தோல்வியை தழுவியது. இந்த ஆண்டு இறுதியில் இம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தோல்வி பாஜகவை ஜர்க் ஆக்கியுள்ளது. எனவே இதிலிருந்து மீள, பசு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications