உத்தவ் தாக்கரே மீது அதிருப்தில்லை! காங்கிரஸ், என்சிபி தான் பிரச்சனையே! சிவசேனா அமைச்சர் பரபர
மும்பை: மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் ‛‛எங்களுக்கு சிவசேனா தலைமை மீது அதிருப்தி இல்லை. தேசியவாத காங்கிரஸ், காங்கிஸ் கட்சியின் கூட்டணியில் இருப்பது தான் சிரமமாக உள்ளது'' என அதிருப்தியாளர்களில் ஒருவரும் சிவசேனா அமைச்சருமான சந்தீபன் பூமாரே கூறியுள்ளார்.
Recommended Video
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. பாஜக பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
2019 சட்டசபை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட சிவசேனா கூட்டணியில் இருந்து விலகியது. இதையடுத்து சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து மகா விகாஷ் அகாடி என கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.

இரண்டரை ஆண்டு ஆட்சியில் குழப்பம்
இந்த கூட்டணியின் முதல்வராக உத்தவ் தாக்கரே உள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த கூட்டணிக்குள் எந்த குழப்பமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தான் சமீபகாலமாக சிவசேனா, பாஜகவை கடுமையாக எதிர்க்க துவங்கியது. மகாராஷ்டிராவை ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுக்க துவங்கியதே இதற்கு காரணமாகும். இதனால் பாஜக, சிவசேனா இடையே வார்த்தை போர் வெடித்தது.

விடுதியில் எம்எல்ஏக்கள்
இதன் உச்சமாக தான் தற்போது சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் மகாராஷ்டிராவில் இருந்து கிளம்பி தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் 46 எம்எல்ஏக்கள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே மீது அதிருப்தி இல்லை
இந்நிலையில் அதிருப்தியாளர்களில் ஒருவரும். சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்தீபன் பூமாரே கூறுகையில், "சிவசேனா தலைமையுடன் எங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை. கூட்டணியில் தான் பிரச்சனை உள்ளது. இதுபற்றி முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் புகாரளித்தோம். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்களுடன் பணியாற்றுவது கடினமாக உள்ளது. அமைச்சராக உரிய இலாகா எனக்கு வழங்கப்படவில்லை. இதுவும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியால் தான் நிகழ்ந்துள்ளது. இதனால் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை'' என்றார். இவர் தற்போது வேலைவாய்ப்பு மற்றும் தோட்டக்கலைத்துறை அமைச்சராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

துவங்கிய அமைச்சரவை கூட்டம்
இதன்மூலம் சிவசேனா கட்சியினருக்கும், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் முரண்பாடு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் தான் தற்போது மகாராஷ்டிரா அரசின் அமைச்சரவை கூட்டம் துவங்கியுள்ளது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக கூறப்படும் நிலையில் தான் இந்த அமைச்சரவை கூட்டம் துவங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications