மகாராஷ்டிராவில் மாற்றி அடிக்கும் காற்று! பாஜகவுக்கு ஜாக்பாட்? காங்கிரஸுக்கு செம ஷாக்! 3 காரணங்கள்
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கடும் போட்டியே நிலவி வருகிறது. ஆனால் மகாராஷ்டிராவில் கூட ஹரியானாவில் ஏற்பட்டது போல கடைசி நேரத்தில் கள சூழல் மாறி, பாஜகவுக்கு ஆதரவான ஒரு நிலைமை ஏற்படலாம். இதற்கான 3 முக்கிய காரணங்களை நாம் பார்க்கலாம்.
மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான பாஜக- சிவசேனா- என்சிபி கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. அங்கு எதிர்க்கட்சிகளும் வலிமையாகவே இருக்கிறது.

மகாராஷ்டிரா தேர்தல்: அங்குள்ள 288 சட்டசபை தொகுதிகளில் ஒரே கட்டமாக வரும் நவ. 20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து நவ. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தற்போது கடும் போட்டி நிலவினாலும் கடைசி நேரத்தில் கள சூழல் மாறி, பாஜகவுக்கு ஆதரவான ஒரு நிலைமை ஏற்படலாம். இதற்கான 3 முக்கிய காரணங்களை நாம் பார்க்கலாம்.
பாயிண்டு 1: காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் முடியவில்லை. காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு தாக்ரே தரப்பு முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்கிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் இதை எழுப்பியுள்ளார். ஆனால், காங்கிரஸ் மற்றும் என்சிபி கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்கிறது.
மேலும் சிவசேனா, என்சிபி ஆகிய இரு கட்சிகளும் பிளவுபட்டு இருப்பதால் தற்போது இந்தியா கூட்டணியில் அங்கு காங்கிரஸ் கட்சிக்கே அதிக சீட்கள் உள்ளன. எனவே, தங்கள் கட்சிக்கே அதிக சீட் வேண்டும் என்ற குரல்கள் அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும், ஹரியானா தோல்வியால் காங்கிரஸால் இப்போது அதிக சீட்களை பெற முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், தாக்ரே சிவசேனா இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு இல்லாமல் இழுபறி நிகழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறுபுறம் பாஜக சத்தமில்லாமல் கூட்டணி பேச்சுவார்த்தையை எல்லாம் முடித்துவிட்டது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றாலும் கூட தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்றால் ஷிண்டே முதல்வராகத் தொடர்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பம் பாஜகவின் முதல் பிளஸ் பாயிண்டு.
பாயிண்டு 2: அடுத்து ஹரியானாவைப் போலவே இங்கும் பாஜக கூட்டணி பல இலவச வாக்குறுதிகளை அறிவிக்க உள்ளதாம். மகாராஷ்டிராவில் ஏற்கனவே அமலில் இருக்கும் 10 திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஷிண்டே அரசு இப்போது ஒரு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. பெண்கள், இளைஞர்கள், விவாசியகளுக்கு பலன் தரும் இத்திட்டம் குறித்து மக்களிடையே எடுத்துச் செல்லப்பட்டால் அது பாஜகவுக்கு ஆதரவாக மாறும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர்.
மேலும், மும்பையில் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் மும்பைக்கு வரும் ஐந்து சுங்கச்சாவடிகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று ஷிண்டே அறிவித்தார். இது மும்பை வாக்காளர்களை கவர மிக முக்கிய திட்டமாக பார்க்கப்படுகிறது.
பாயிண்டு 3:கடந்த லோக்சபா தேர்தலில் அரசியலமைப்பு ஆபத்தில் இருக்கிறது என்ற முழக்கத்தை வைத்து இந்தியா கூட்டணி தேர்தலை எதிர்கொண்டு இருந்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆனால், ஹரியானா தேர்தலில் இதே முழக்கம் காங்கிரஸ் கட்சிக்கு பலன் தரவில்லை. எனவே, மகாராஷ்டிராவில் மீண்டும் அதையே காங்கிரஸ் கட்சியால் முன்வைக்க முடியாது. மறுபுறம் பாஜக இரட்டை இன்ஜின் அரசு, சிறப்பு திட்டங்களை முன்வைத்தே பிரச்சாரம் செய்து வருகிறது. அதாவது பாஜகவின் மெசேஜ் இதுதான் என்பதில் தெளிவு இருக்கிறது.
ஆனால் எதிர்க்கட்சி கூட்டணியில் இந்த தெளிவு இல்லை. இப்போது பாபா சித்திக் படுகொலையால் சட்ட ஒழுங்கை ஒரு காரணமாக எடுத்துள்ளனர். ஆனால், அதை மக்களிடையே வெற்றிகரமாக எடுத்துச் செல்ல முடியுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க முடியும். தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் போது பாஜகவுக்கு ஒரு பிளஸ் பாயிண்டு தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications