கப்பலில் வேலை செய்த கணவர்.. லாட்ஜ் "ஓனருடன்" மரியாவுக்கு கள்ளக்காதல்.. கடைசியில் நடந்த ஒரு கொலை
நாகை: கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் கணவன், மனைவியை போலீஸார் கைது செய்த சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆசிரியர் குடியிருப்பு, பார்வதி மந்திரம் தெருவை சேர்ந்தவர் வினோத் விக்டர் (36). கப்பலில் பணியாற்றி வரும் இவர் தனக்கு சொந்தமான வேளாங்கண்ணி மாதா குளம் அருகில் உள்ள ஏஞ்சல் லாட்ஜ் என்ற விடுதியை வேளாங்கண்ணி பகுதியை சேர்ந்த மதன் கார்த்தி (38) என்பவருக்கு ஒரு வருடத்திற்கு குத்தகைக்கு வழங்கியுள்ளார்.
வினோத் விக்டர் கப்பலில் வேலை செய்வதால் மாதத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வீட்டில் இருப்பார். இந்த நிலையில் வினோத் விக்டரின் மனைவி மரியா ரூபினா மார்ட்டினா (36) என்பவருக்கும், விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த மதன் கார்த்திக் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வினோத் விக்டர்
அதனை தொடர்ந்து வினோத் விக்டர் சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணிக்கு வந்து, மேற்படி மதன் கார்த்திக்கிடம் ஒரு வருட கால குத்தகைக் காலம் முடிந்ததால், விடுதியை காலி செய்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் முடியாது என கூறியதால் இருவருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

ஓட்டுநர்
இந்த நிலையில் ஓட்டுநர் வைத்து தனது மனைவியுடன், காரில் நாகையில் இருந்து வினோத் விக்டர் வேளாங்கண்ணி திரும்பியுள்ளார். அப்போது, வேளாங்கண்ணி அருகே மதன் கார்த்திக் மற்றும் அவருடைய நண்பர்கள் காரை மறித்துள்ளனர். இதனை பார்த்த மனைவி மரியா ரூபினா மார்ட்டினா மற்றும் ஓட்டுநர் ஆல்வின் ஆகிய இருவரும் இறங்கி ஓடிவிட்டனர்.

அடித்து நொறுக்கிய மதன்
அப்போது வினோத் விக்டரின் காரை அடித்து நொறுக்கி மதன் கார்த்தி உள்ளிட்ட கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலில் தப்பிக்க முயன்ற வினோத் விக்டர் காரை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அவரை விடாமல் தனது நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மதன் கார்த்திக் வேளாங்கண்ணி ஆர்ச் அருகே காரை மறிக்க முயன்றுள்ளார்.

உயிரிழப்பு
இதனால் ஆத்திரம் அடைந்த வினோத் விக்டர் முன்னே வந்து காரை மறித்த மதன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் அமுதன் ஆகியோரை அடித்து தூக்கினார். இதனால் இடது கை மற்றும் இடது மார்பு ஆகிய இடங்களில் படுகாயமடைந்த மதன் கார்த்திக் நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார். மேலும், அவருடைய நண்பர் அமுதன் படுகாயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வலது கண்ணில் ரத்த காயம்
தொடர்ந்து வலது கண்ணில் ரத்தக்காயத்துடன், காருடன் நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வினோத் விக்டர் ஆஜராகினார். அதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வேளாங்கண்ணி போலீசார் வினோத் விக்டர் மற்றும் அவருடைய மனைவி மரியா ரூபினா மார்ட்டினா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திடுக் தகவல்
போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கள்ள காதலனை வைத்து கணவரை போட்டுதள்ள மனைவி திட்டம் தீட்டியதும், அதற்கு ஓட்டுநர் உதவியாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவரை திட்டமிட்டு கொலை செய்ய முயற்சித்த வழக்கில் மனைவியும் , கள்ளக்காதலனை கொலை செய்த வழக்கில் கணவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications