பிளஸ்1 மாணவிக்கு பாலியல் தொல்லை.. காதலன் அதிரடி கைது.. காதலுக்கு உதவிய நண்பர்களையும் தூக்கிய போலீசார்
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பிளஸ்1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்ப்பட்டார்.
காதலுக்கு உதவிய நண்பர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காதலை வளர்த்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கேல் டோனிக் (22). இவருக்கும் வாணியகுடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் செல்போனில் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

பாலியல் தொல்லை
இந்த நிலையில் ஆல்டோ மைக்கிள் டோனிக் தனது காதலியான அந்த மாணவியை நாகர்கோவில் அருகேயுள்ள உலக்கை அருவி பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த தகவல் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

கைது செய்தனர்
இதையடுத்து மாணவியின் தாய் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆல்டோ மைக்கேல் டோனிக், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

நண்பர்களும் சிக்கினர்
இந்த சம்பவத்தில் ஆல்டோ மைக்கேல் டோனியின் நண்பர்களான கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக் ஆகிய 3 பேரும் ஆல்டோ மைக்கேல் டோனி காதலுக்கு உதவியது தெரிய வந்தது. இதனால் அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்ப்பட்ட நான்கு பேரையும் நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

எச்சரிக்கையாக இருக்கணும்
இதற்கிடையே காதலனால் பாதிக்கப்பட்ட பிளஸ் 1 மாணவி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். படிக்கும் பெண்கள் இதுபோல் ஏமாற்றி பெண்களை சீரழித்து வரும் கயவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க என்றும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications