திமுக மாவட்டச் செயலாளர் போட்ட ஸ்கெட்ச்! பாஜகவுக்கு குட்-பை சொல்லிய மாஜி நிர்வாகிகள்! என்ன பின்னணி?
நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வெண்ணந்தூர் ஒன்றியத்தில், பாஜக முன்னாள் நிர்வாகிகள் உட்பட 30 பேரை திமுகவில் இணைத்து அண்ணாமலைக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ராஜேஷ்குமார் எம்.பி.
தமது பாதயாத்திரை மூலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கட்சி மேலிடத்தில் அண்ணாமலை விளக்கம் அளித்துக் கொண்டிருக்கும் வேளையில் பாஜகவிலிருந்து 30 இளைஞர்கள் உட்பட முன்னாள் நிர்வாகிகள் வெளியேறி இருக்கின்றனர்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் இருப்பவர் ராஜேஷ்குமார். மாற்றுக்கட்சிகளை சேர்ந்தோரை திமுகவில் இணைப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வரும் இவர் ஏற்கனவே அதிமுகவிலிருந்து பல முக்கிய நிர்வாகிகளை திமுகவுக்கு அழைத்து வந்தார். இப்போது அடுத்தப்படியாக அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ள பாஜகவினரை தேடி தேடி பிடித்து அவர்களை திமுகவுக்கு அழைத்து வந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் சொந்த மாவட்டமாகும். அதேபோல் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமியின் மாவட்டமும் இது தான். அதேபோல் திமுக முன்னாள் எம்.பி.யும், பாஜக முக்கிய நிர்வாகியான கே.பி.ராமலிங்கத்தின் மாவட்டமும் நாமக்கல் தான்.
இவ்வளவு பேர் இருந்தும் எங்களுக்கு என்ன பயன் என்று கேட்டு முன்னாள் ஒன்றியச் செயலாளர் ரவி உட்பட பாஜகவை சேர்ந்த 30 இளைஞர்கள் அக்கட்சிக்கு குட்-பை சொல்லிவிட்டு திமுக மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். அண்ணாமலை பாதயாத்திரை நடத்திக் கொண்டிருக்கும் போதே இந்தக் கட்சி தாவல் படலம் நடந்துள்ளது. இதன் மூலம் அண்ணாமலை மீதுள்ள தங்கள் அதிருப்தியை அவர்கள் உணர்த்தியுள்ளனர்.

சமீபநாட்களாக பாஜகவிலிருந்து திமுகவில் யாரும் அதிகம் இணையாத சூழலில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் மட்டும் தான் பாஜகவை சேர்ந்த 30 இளைஞர்கள் திமுகவில் இணைந்துள்ளனர். இதனால் இது அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
பாஜகவை போல் அதிமுகவிலிருந்தும் சிலரை திமுகவில் இணைக்கும் வேலையை ராஜேஷ்குமார் எம்.பி. தரப்பு முன்னெடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications