"விற்கப்பட்ட குழந்தைகள்.. உதவிய அரசு மருத்துவர்.." அதிர்ந்துபோன திருச்செங்கோடு! இருவர் அதிரடி கைது
நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரத்தில் அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் அனுராதா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது தனியார் கிளின்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள வாலரைகேட் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். 29 வயதான இவர் அங்கே விசைத்தறி தொழிலாளியாக உள்ளார். இவருக்கு நாகதேவி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருந்தனர்.

நாகதேவி மீண்டும் கருவுற்ற நிலையில், அவருக்குச் சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. அரசு மருத்துவமனையில் தான் அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது.
என்ன நடந்தது: இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தினேஷை திருச்செங்கோடு சானார்பாளையத்தைச் சேர்ந்த லோகாம்பாள் என்பவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். தினேஷை நேரில் சந்தித்து முக்கியமான விஷயம் குறித்துப் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு தினேஷும் நேரில் சென்று சந்தித்துள்ளார். நேரில் சந்தித்த போது 3ஆவதாகப் பிறந்த பெண் குழந்தையை விற்பனை செய்ய வலியுறுத்தியுள்ளார். இதற்கு 2 லட்ச ரூபாய் தருவதாகப் பேரமும் பேசியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தினேஷ் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை.. தானா குழந்தையை வளர்த்துக் கொள்கிறேன் என கூறிவிட்டு வந்துவிட்டார். இதையடுத்து அவர் கடந்த 12ஆம் தேதி திருச்செங்கோடு காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை ஆரம்பித்தனர். தினேஷுக்கு லோகாம்பாள் போன் செய்த நிலையில், அதை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
மருத்துவருக்குத் தொடர்பு: அப்போது லோகாம்பாள் குழந்தையை விற்பனை செய்யப் பேரம் பேசியது உறுதியானது. இதையடுத்து லோகாம்பாளை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பல ஷாக் தகவல்கள் தெரிய வந்தது. அதாவது ஏழ்மை நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோரை இது போல அணுகி அவர்களிடம் பேரம் பேசி குழந்தைகளை விற்பனை செய்வாராம்.
அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில்.. இந்தச் சம்பவத்தில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் அனுராதா என்பவருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அனுராதாவையும் போலீசார் கைது செய்தனர். மருத்துவர் அனுராதா, இடைத்தரகர் லோகாம்பாள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மருத்துவர் அனுராதா பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
கைது: இந்த விவகாரத்தில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதைக் கண்டறிய டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுராதா பயன்படுத்திய அறை சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் திருச்செங்கோடு சேலம் சாலையில் சொந்தமாகத் தனியார் கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தார். அந்த கிளினிக்கிற்கும் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.












Click it and Unblock the Notifications