நாம மட்டும் இல்லங்க.. மாஸ்க் போட்டுக் கொண்டு பூமிக்கு அருகே வரும் சிறுகோள்.. நீங்களும் பாருங்களேன்!
பூமிக்கு அருகில் வரும் சிறுகோள் ஒன்று மாஸ்க் அணிந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
நியூயார்க்: பூமிக்கு அருகில் வரும் சிறுகோள் ஒன்று மாஸ்க் அணிந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை அரேசிகோ விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
.
ராட்சத சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வருவதாக கடந்த ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்திருந்தது. 13,500 அடி சுற்றளவு கொண்ட அந்த சிறுகோளிற்கு 52768 (1998 OR2) என விஞ்ஞானிகள் பெயரிட்டனர்.
இந்த சிறுகோள் கடந்த 1998ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தான் அதற்கு ஆஸ்ட்ராய்ட் 1998 OR2 என பெயரிடப்பட்டது.

ஆபத்தில்லை
1.1 முதல் 2.5 மைல் அகலம் வரை இருக்கும் அது, நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 29ம் தேதி 4.56 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை என நாசா விஞ்ஞானிகள் ஏற்கனவே தெளிவு படுத்திவிட்டனர்.

புதிய புகைப்படம்
இந்நிலையில் இந்த சிறுகோளின் புதிய புகைப்படத்தை, கரீபியன் கடலில் உள்ள அமெரிக்காவின் ஆளுகைக்கு உட்பட்ட பியூர்டோரிகோவில் செயல்படும் அரேசிபோ விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில் பார்ப்பதற்கு அந்த சிறுகோள் மாஸ்க் அணிந்துள்ளது போல் உள்ளது.

மாஸ்க் அணிந்த சிறுகோள்
இது தொடர்பாக அரேரிசிபோ வெளியிட்டுள்ள டிவீட்டில், "சிறுகோளை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த சிறுகோள் மாஸ்க் அணிந்திருப்பது போல் உள்ளது", எனத் தெரிவித்துள்ளது. ஒப்பீடு செய்வதற்காக சம்பந்தப்பட்ட அந்த சிறுகோளின் புகைப்படத்துடன் கூடவே மாஸ்க் அணிந்த சிலரது புகைப்படங்களும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா பயம்
கொரோனா நோயின் தாக்கத்தால் உலகமே இன்று முகக்கவசம் அணிந்திருக்கிறது. மாஸ்க் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு இந்தியா உள்பட பல நாடுகளில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் பூமிக்கு அருகில் வரும் சிறுகோளும் மாஸ்க் அணிந்திருப்பது போன்ற தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன செய்ய அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான் போல...












Click it and Unblock the Notifications