யம்மாடியோ.. 62 நாள் கொரோனா சிகிச்சைக்கு ரூ. 8.35 கோடி பில்.. ஷாக்கான அமெரிக்க தாத்தா
அமெரிக்காவின் சியாட்டல் பகுதியை சேர்ந்த ஒருவர், கொரோனா நோயில் இருந்து மீண்டு வர ரூ.8 கோடி மருத்துவமனைக்கு செலவு செய்துள்ளார்.
நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்த முதியவர் ஒருவருக்கு 62 நாட்கள் சிகிச்சைக்கு ரூ.8 கோடி வரை மருத்துவ செலவு ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் இன்று கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் தான் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும், ரஷ்யா 3வது இடத்திலும், இந்தியா 4வது இடத்திலும் இருக்கின்றன. இதனால் இந்த நாடுகளின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க முதியவர்
இந்நிலையில் அமெரிக்காவின் சியாட்டல் பகுதியை சேர்ந்த 70 வயது முதியவர் மைக்கேல் பிளோர் என்பவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு 62 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

62 நாட்கள் சிகிச்சை
கொரோனாவுக்காக மிக அதிக நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமெரிக்கர் பிளோர் தான். அதுமட்டுமல்ல, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர மிக அதிக பணம் செலவு செய்த நபரும் பிளோர் தான். 62 நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிளோருக்கு, மருத்துவமனையில் இருந்து 181 பக்கத்துக்கு ரசீது வழங்கப்பட்டது.

ரூ.8 கோடி பில்
அதைப்பார்த்து, பிளோர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அதில் அவருக்கு சுமார் 1.1 மில்லியன் டாலர் மதிப்பிலான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் அவரது மருத்துவ செலவு ரூ.8.35 கோடி.

அரசே செலுத்திவிடும்
ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், பிளோர் எந்த பணமும் செலுத்த தேவையில்லை என்பது தான். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சை செலவை அமெரிக்க அரசே ஏற்றுக்கொண்டிருப்பதால் பிளோருக்கு எந்த பரிச்சினையும் இல்லை. அதிர்ஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்றை தவிர வேறு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை என்பதால், சிகிச்சைக்கான பணத்தை அரசு செலுத்தவில்லை என்றாலும், பிளோரின் மருத்துவ காப்பீட்டு நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்ளும்.

பிளோரின் குற்ற உணர்ச்சி
இருப்பினும் தன் மீது குற்ற உணர்ச்சியில் இருக்கிறார் மைக்கேல் பிளோர். தன்னால் அரசுக்கு இவ்வளவு பணம் செலவாகிவிட்டதே என நினைத்து வேதனைப்படுகிறாராம் அவர். சுகாதாரத்துறைக்கே அரசு எல்லாப் பணத்தையும் செலவு செய்துவிட்டால், அமெரிக்க பொருளாதாராம் என்னவாகும் என நினைத்து கவலைப்படுகிறாராம் பிளோர்.












Click it and Unblock the Notifications