சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட டிரம்ப்.. இழந்த வாய்ப்பை மீண்டும் பெறுமா இந்தியா?
நியூயார்க்: மெக்சிகோ, கனடா மற்றும் சீனா மீது டிரம்ப் கூடுதல் வரியை அறிவித்திருக்கிறார். இது இந்தியாவுக்குதான் புதிய பொருளாதார வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் என்றும், அதே நேரம் கூடுதல் வரி அமெரிக்காவுக்கு பலனளிக்காது எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கூடுதல் வரி மூலம் அமெரிக்கா தற்போது பெரிய நெருக்கடியை சந்திக்க தயாராகி வருகிறது என்று கூறும் நிபுணர்கள், இந்தியா இந்த விஷயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் அதிகரிக்கும் உற்பத்தி செலவு
சட்டவிரோத குடியேறிகளை காரணம் காட்டி மெக்சிகோ, கனடாவுக்கு 25% கூடுதல் வரியும் சீனாவுக்கு 10% கூடுதல் வரியும் டிரம்ப் விதித்திருக்கிறார். ஆனால் அவர் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். அதாவது அமெரிக்க மக்கள் பயன்படுத்தும் கார்கள், பைக்குகளுக்கான உதிரி பாகங்கள் இந்த மூன்று நாடுகளில்தான் தயாரிக்கப்படுகிறது. அதாவது,
மெக்சிகோவில் - 38%
கனடாவில் - 10%
சீனாவில் - 9.5%
ஆக, அமெரிக்காவில் ஓடும் கார், பைக்குகளில் ஏறத்தாழ 60% வெளிநாடுகளில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்தான் இதற்கான முக்கிய காரணம். அமெரிக்காவில் தொழிலாளர்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டும். இதுவே மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவில் குறைந்த சம்பளத்தில் வேலையை முடித்துவிடலாம். எனவே உற்பத்தி நிறுவனங்கள் இந்த நாடுகளில் இயங்கி வருகின்றன.
வரி மூலம் மண்ணை வாரி போட்டுக்கொண்ட டிரம்ப்
மேற்குறிப்பிட்ட மூன்று நாடுகளுக்கும் வரி போட்டதன் மூலமாக, இந்த நாடுகளிலிருந்து தயாரித்து அமெரிக்காவில் விற்கப்படும் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. எனவே, மக்கள் மாற்று வழியை தேடி வருகின்றனர். உள்நாட்டிலேயே உற்பத்தியை அமைப்பது குறித்து நிறுவனங்கள் யோசித்து வருகின்றனர். அப்படி செய்தால் செலவு அதிகமாகும். மக்களால் வாங்க முடியாது. இந்த அழுத்தம் காரணமாகத்தான், கூடுதல் வரி உத்தரவை நிறுத்தி வைக்க டிரம்பை தூண்டியிருக்கிறது.
30 நாட்களுக்கு இந்த வரி உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் வாயால், அமெரிக்க மக்கள் சொல்ல வைத்திருக்கின்றனர்.
இந்தியாவுக்கான வாய்ப்பு என்ன?
மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு விதித்ததை போல இந்தியாவுக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. எனவே, இந்திய தயாரிப்பு பொருட்களின் விலை அமெரிக்காவில் உயரவில்லை. நம்மூர் பொருட்கள் விலை குறைவாக இருப்பதால் மக்களும் இதை வாங்க தொடங்கியுள்ளனர். இது நமது நாட்டின் வர்த்தக மதிப்பையும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இன்று டிரம்பை நேரில் சந்தித்து மோடி பேச இருக்கிறார். இந்த சந்திப்பின்போது அவர் வர்த்தகம் தொடர்பாக இரண்டு விஷயங்களை வலியுறுத்த வேண்டும். ஒன்று, அமெரிக்காவுக்கு இருக்கும் 35 டிரில்லியன் டாலர் கடன். இரண்டாவது, இந்தியாவுடன் நிலவும் வர்த்தக பற்றாக்குறை. இதை வைத்து பேசி, இந்திய பொருட்களுக்கு மேலும் சில வரிச்சலுகைகளை வாங்க முடிந்தால், நம்ம காட்டில் மழைதான்.
இதற்கு முன்னர் இப்படி நடந்திருக்கிறது. 1975ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான ஜெரால்ட் ஃபோர்டு, ஜிபிஎஸ் (Generalized System of Preferences - GSP) எனும் திட்டத்தை அமல்படுத்தினார். வளர்ந்து வரும் நாடுகள், அமெரிக்காவுடன் வரி இல்லாமல் வர்த்தகம் (duty-free access) செய்ய முடியும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம். இந்தியா 2019 வரை அமெரிக்காவுடன் இப்படி வர்த்தகம் செய்து வந்தது. ஆனால் அதன் பின்னர் இந்தியாவை அமெரிக்கா இந்த திட்டத்திலிருந்து விலக்கிவிட்டது.
மீண்டும் இப்படி ஒரு திட்டத்தில் இந்தியாவை இணைக்க முடியுமா? என்பது பிரதமர் நரேந்திர மோடி கையில்தான் இருக்கிறது. சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட டிரம்ப் மூலம் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் பெரிய வாய்ப்பு இது என நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications