ரஷ்யா போரை நீட்டிக்கும் அமெரிக்கா.. உக்ரைனுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுத உதவியை வழங்க முடிவு
நியூயார்க்: கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் தற்போது வரை நீடித்து வருகிறது. போர் நீடிப்பது சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், அமெரிக்கா தற்போது ரூ.2.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை செய்ய முன்வந்திருக்கிறது.
சோவியத் காலத்தில் அதற்கு போட்டியாக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. ஆனால், சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கப் புள்ளி. கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொண்டே வந்த அமெரிக்காவின் நேட்டோ கடைசியாக உக்ரைனுக்கு வந்து நின்றது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஆதரவாளர்.

அப்புறம் என்ன, உள்ளேன் அய்யா என்று சொல்லி நேட்டோவுக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றார். உக்ரைன் ரஷ்யாவுக்கு பக்கத்தில் உள்ள நாடு. ஏற்கெனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் ஏழரை சனி. இப்படி இருக்கும்போது உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் அமெரிக்க படைகள் நேரடியாக ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இது பெரும் அச்சுறுத்தல். எனவே ரஷ்யா போரை அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த போர் தொடங்கியது.
2 வாரங்கள்தான் போர் நீடிக்கும் என்று ரஷ்யா சொன்னது. ஆனால், அமெரிக்கா கொடுத்த ஆயுத உதவியால் 2 ஆண்டுகள் கடந்து இப்போதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இதுவரை ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு மனிதாபிமான உதவியாகவும், ரூ.24 ஆயிரம் கோடி வளர்ச்சி நிதி என்கிற பெயரிலும், ரூ.1.9 லட்சம் கோடி நேரடி உதவியாகவும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.
இந்த நிதி எவ்வளவு பெரியதெனில், தமிழ்நாட்டில் உள்ள 7 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கடந்த ஆண்டு போடப்பட்ட பட்ஜெட் தொகை ரூ.34,540 கோடிதான். அப்படியெனில் உக்ரைன் எவ்வளவு பெற்றிருக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
இதை அமெரிக்கா தனது https://www.usaid.gov/ukraine அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இவ்வளவு நிதி கொடுத்ததன் விளைவாக, இப்போது வரை போர் நீடித்து வருகிறது.
இதெல்லாம் பத்தாது என்று, தற்போது மேலும் ரூ.2.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகள் உக்ரைனுக்கு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருக்கிறது. இதில் பீரங்கி குண்டுகள், தரைவழி, வான்வழி ஆயுதங்கள் ஆகியவை அடங்கும்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் விளைவுகளை நாம் கண் முன்னாள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கையில், ரஷ்யா-உக்ரைன் போர் நீடிக்க கூடாது என்று சர்வதேச நாடுகள் கருத்து தெரவித்து வருகின்றன. ஆனால், இப்போது அமெரிக்கா அறிவித்துள்ள ராணுவ உதவி போரை மேலும் சில ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications