டிரம்போ.. பிடனோ.. யார் வந்தாலும் வெற்றி என்னவோ மோடிக்குத்தான்.. இந்தியா வகுக்கும் ராஜாங்க வியூகம்!
நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் அல்லது பிடன் இருவரில் யார் வெற்றிபெற்றாலும் இந்தியாவிற்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக எப்போதும் போல அமெரிக்க தொடரும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்து.. தற்போது முடிவுகள் வெளியாக தொடங்கி உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் பெரும்பான்மை முடிவுகள் வெளியாகிவிடும். முழுமையான முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் 192 எலக்ட்ரல் வாக்குகளுடன் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் முன்னிலை வகிக்கிறார். அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 114 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.

யார் வருவார்
கலிபோர்னியா வாக்குகளை எண்ணி முடிக்கும் போது மொத்தமாக தேர்தல் முடிவுகள் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்போது யார் முன்னிலை வகித்தாலும்.. கலிபோர்னியா, புளோரிடா, பென்சில்வேனியா வாக்குகளை எண்ணி முடிக்கும் போது தேர்தல் முடிவுகள் பெரிய அளவில் மாறி இருக்க வாய்ப்புள்ளது. இந்த அதிபர் தேர்தலில்.. டிரம்ப், பிடன் என்று யார் வெற்றி பெற்று ஓவல் ஆபிஸ் சென்றாலும்.. வெற்றிபெற போவது என்னமோ இந்தியாவும்.. பிரதமர் மோடியும்தான்!

இந்தியா
ஆம், அமெரிக்காவின் அடுத்த அதிபராக யார் பொறுப்பேற்றாலும் இந்தியாவிற்கு பெரிய சிக்கல் ஏற்படாது. 2008ல் இருந்தே அமெரிக்கா - இந்தியா உறவு நாளுக்கு நாள் நெருக்கமாகிக் கொண்டே இருக்கிறது. மன்மோகன் சிங் - ஒபாமா இடையில் போடப்பட்ட விதை தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. புதிதாக வரும் அதிபரால் இந்த நெருக்கமான உறவை எதுவும் செய்ய முடியாது.

டிரம்ப்
இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றிபெறுவார் என்று எடுத்துக் கொண்டால்.. உறவில் எந்த மாற்றமும் இருக்காது. டிரம்ப் - மோடி நெருக்கமான நண்பர்கள். அடுத்த 4 வருடம் டிரம்ப் அதிபராகவும், மோடி இந்திய பிரதமராகவும் இருப்பார்கள். சீன, பாகிஸ்தான் எதிர்ப்பு என்ற ஒரு குடையில் இருவரும் இணைந்துவிட்டனர். கடந்த நான்கு வருடங்களில் இவர்கள் இருவரின் நட்பும், இந்திய அமெரிக்க உறவும் மிகவும் நெருக்கமாகி உள்ளது.

நெருக்கம்
அதிலும் டிரம்ப் கொண்டு வந்த 2+2 பாதுகாப்பு துறை பேச்சுவார்த்தை எல்லாம் இரண்டு நாட்டு உறவை இன்னும் நெருக்கமாக்கி உள்ளது. கொரோனா சமயத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா உதவியது, சீன எதிர்ப்பு என்று டிரம்ப் - மோடி இடையே நல்ல உறவே இருக்கிறது. சில சமயம் டிரம்ப் இந்தியாவை விமர்சனம் செய்தாலும், கிண்டல் செய்தாலும்.. உறவு முறியும் அளவிற்கு எந்த மோதலும் இல்லை.

பிடன்
இன்னொரு பக்கம் பிடனை எடுத்துக்கொண்டால், இவர் செனட்டராக இருந்த சமயத்தில் இருந்தே இந்தியா உடன் நெருக்கமாக இருந்தவர். அதிலும் இவர் ஒபாமாவிற்கு கீழ் துணை அதிபராக இருந்த போதுதான் இரண்டு நாட்டு உறவு வலிமை அடைந்தது. 2008ல் தொடங்கப்பட்ட ராணுவ ஒப்பந்தங்கள், அதன்பின் செய்யப்பட்ட பொருளாதார ரீதியான ஒப்பந்தங்கள் அனைத்திற்கும் பிடன் ஒரு வகையில் காரணமாக இருந்தார்.

விசா
விசா விதிமுறைகளில் டிரம்பை விட பிடன் இந்தியர்களுக்கு கூடுதல் ஆதரவாக இருக்கிறார். அதேபோல் இவர் அதிபர் ஆனால், கமலா ஹாரிஸ் துணை அதிபர் ஆவார் என்பதால்.. இரண்டு நாட்டு உறவு இன்னும் வலிமை அடையும். காஷ்மீர், சிஏஏ விஷயத்தில் இவர் இந்தியாவிற்கு எதிராக பேசி இருந்தாலும், பிடன் தனது கருத்தை பின் நாட்களில் மாற்றிக்கொண்டார்.

மாற்றினார்
இந்தியாவிற்கு ஐநாவின் பாதுகாப்பு சபையில் நிலையான இடம் வாங்கி தருவேன் என்றும் பிடன் உறுதி அளித்துள்ளார். இதனால் இரண்டு பேரில் யார் அதிபராக வந்தாலும் வெற்றி என்னமோ மோடிக்குத்தான். யார் வந்தாலும் பாகிஸ்தானையும், சீனாவையும் எதிர்க்க போகிறார்கள். இதனால் இரண்டு நாட்டு உறவில் பெரிய பாதிப்பு இருக்காது.

ராஜாங்க வியூகம்
அடுத்த 4 வருடம் பெரிய அளவில் இந்தியா அமெரிக்காவின் ராஜாங்க உறவு எந்த பாதிப்பையும் சந்திக்காது. ஆனால் புதிய அதிபர் வந்ததும்.. அது டிரம்பாக இருந்தாலும் இந்தியா உறவை புதுப்பிக்க முயல வேண்டும். சீனாவின் ஆபத்து ஒரு பக்கம் இருக்கிறது. கொரோனா வேக்சின் தேவை இருக்கிறது. இதனால் புதிய அதிபரை விரைவில் நண்பன் ஆக்கிக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை இந்தியா எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications