திமிரும் அமெரிக்கா! ஜெய்சங்கர் இந்தியா திரும்பிய மறுநாளே.. முஷ்டி முறுக்கிய "பிக்பாஸ்".. பரபர முடிவு
நியூயார்க்: இந்தியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் பொருளாதார ரீதியாக வரி விதிப்பு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில்தான் எண்ணெய் வர்த்தக தொடர்பாக தற்போது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் ஸ்டீல் பொருட்களுக்கு என்று கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு சலுகைகளை பிரிட்டன் நீக்கி உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் அளவு வெகுவாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 25 சதவிகிதம் வரை கூடுதல் வரி கட்ட வேண்டும். இதையடுத்து பிரிட்டனின் செயலுக்கு தற்போது இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

பிரிட்டன்
அதன்படி பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 22 வகையான பொருட்களுக்கு இந்தியா அதிரடியாக வரியை உயர்த்தி உள்ளது. 15 சதவிகிதம் வரியை இந்தியா பிரிட்டனுக்கு எதிராக விதித்து உள்ளது. விஸ்கி, சீஸ், டீசல், எஞ்சின் பொருட்கள் போன்றவற்றிக்கு வரியை விதித்து உள்ளது. இப்படி இந்தியா பிரிட்டன் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இன்னொரு பக்கம் இந்தியா அமெரிக்கா இடையே எண்ணெய் வர்த்தகம் காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது. அதுவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி ஒரே நாளில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.

ஈரான்
கடந்த 2019ல் இருந்து ஈரானிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது இல்லை. அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேறவில்லை என்று ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தது. இதையடுத்து ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்த தடை காரணமாக இந்தியா நேரடியாக பாதிக்கப்பட்டது. ஈரானிடம் எண்ணெய் வாங்க இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டு இருந்த விலக்கும் நீக்கப்பட்டது.

இந்தியா மிரட்டல்
இந்தியாவை கிட்டத்தட்ட மிரட்டி.. முஷ்டியை முறுக்கித்தான் ஈரான் எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா தடை செய்தது. 2019ல் இது பெரிய அளவில் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்தது. ஈரான் வர்த்தகத்தில் அமெரிக்கா பேச்சை கேட்ட இந்தியா அதன்பின் அமெரிக்காவின் பேச்சிற்கு எல்லாம் தலையாட்டவில்லை. முக்கியமாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு அஞ்சவில்லை. இந்த நிலையில்தான் தற்போது எண்ணெய் வர்த்தகத்தில் இன்னொரு மோதல் இந்தியா - அமெரிக்கா இடையே ஏற்பட்டு உள்ளது.

ஐநா மாநாடு
அமெரிக்காவிற்கு ஐநா மாநாட்டிற்காக அமைச்சர் ஜெய் சங்கர் சென்று இருந்தார். அங்கு இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை, பாதுகாப்பு கொள்கை, ரஷ்யாவுடனான உறவு என பல விஷயங்கள் பற்றி பேசினார். அதன்பின் நேற்று முதல்நாள் இந்தியா திரும்பினார். அவர் இந்தியா திரும்பிய மறுநாளே இந்திய நிறுவனம் ஒன்றிற்கு நேற்று அமெரிக்கா தடை விதித்து உள்ளது. இந்தியாவை சேர்ந்த பெட்ரோலிய நிறுவனமான Tibalaji Petrochem Private Limited நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை விதித்து உள்ளது.

எண்ணெய் பொருட்கள்
இந்த நிறுவனம் ஈரானில் இருந்து எண்ணெய் பொருட்களை வாங்கியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. அதோடு ஈரான் எண்ணெய் பொருட்களை சீனாவிற்கு விற்பனை செய்ததாகவும் கூறி இந்த நிறுவனத்தை தடை செய்துள்ளது. அதாவது இந்த நிறுவனம் ஈரானுக்கும் பிற நாடுகளுக்கும் இடையில் ப்ரோக்கர் போல செயல்பட்டு இப்படி வர்த்தகம் செய்துள்ளதாக கூறியுள்ளது. இந்த தடை இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படாது.

கவனம்
ஆனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம்தான் கவனம் பெறுகிறது. சரியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பி வந்த நேரம் பார்த்து இந்த தடை போடப்பட்டு உள்ளது. இதுதான் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ஐநா கூட்டத்திற்கு முன்பே இந்த தடையை விதித்து இருக்கலாம். அல்லது சில காலம் கழித்து விதித்து இருக்கலாம். ஆனால் இந்திய நிறுவனம் ஒன்றை இப்போது நேரம் பார்த்து அமெரிக்கா தடை செய்தது கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications