ராஜநாகம் 12 அடி நீலகிரியில்.. பந்தலூரில் பாம்பு மழை! அரசு பள்ளியில் குபுகுபுவென புகுந்த 16 பாம்புகள்
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் 65 சதவீத நிலப்பரப்பு அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால், அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் என்பது மிகவும் இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது. அதிலும் சமீப காலங்களில் அதிக அளவு பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடுவதும் அதிகரித்து வருகிறது.. நேற்று ஒரே நாள் நடந்த சம்பவம், நீலகிரி மாவட்டத்தையே பதறடிக்க செய்துவிட்டது.. என்ன நடந்தது?
நீலகிரி ஒரு குளிர் பிரதேசமாகும்.. கடும் குளிர் காரணமாக பாம்புகளின் நடமாட்டம் அங்கு குறைவாகவே இருக்கும்.. இதமான காலநிலை நிலவும் மாயாறு, மசினகுடி, குஞ்சபனை மற்றும் பரலியார் போன்ற பகுதிகளில் மட்டுமே பாம்புகள் வசிப்பதுண்டு..

நீலகிரி ஊட்டி குன்னூர் பாம்புகள்
குறிப்பாக நீலகிரி பொந்து பாம்பு, ஓலைப்பாம்பு போன்ற விஷமற்ற வகைகளும், திமில்மூக்கு குழிவிரியன் மற்றும் குதிரை லாடக்குழி விரியன் போன்ற விஷத்தன்மை கொண்ட பாம்புகளும் இந்தப் பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
ஆனால், சமீபகாலமாக மலைப்பாம்புகள் மற்றும் நாகப்பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகை பாம்புகளின் நடமாட்டம் நீலகிரி மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக அதிகரித்து வருவது மாவட்ட மக்களை கிலியில் தள்ளியிருக்கிறது..
வாழைத்தோட்டம் மலைப்பாம்பு
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டியில் இருந்து மசினகுடி செல்லும் சாலையில், வாழைத்தோட்டம் கிராமம் அருகே ஒரு பெரிய மலைப்பாம்பு சாலையோரம் வந்து தஞ்சம் புகுந்தது. நீண்ட நேரமாக அங்கேயே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்தப் பாம்பு, அவ்வழியாக சென்ற வாகனங்களைக் கண்டு அஞ்சாமல் நடுவழியில் நின்று 'போஸ்' கொடுத்தது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு அந்த மலைப்பாம்பு மெல்ல நகர்ந்து வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது இந்தப் பகுதிகளில் மலைப்பாம்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்..
ஒரே நாளில் பாம்புகளால் திணறிய நீலகிரி
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து பாம்புகள் பிடிபட்ட சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குன்னூர் அருகே உபதலை பகுதியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நேற்று ஒரே நாளில் 6 பாம்புகள் மீட்கப்பட்டது மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பள்ளியில் ஏற்கனவே 10 பாம்புகள் பிடிபட்ட நிலையில், இப்போது பிடிபட்டதையும் சேர்த்து மொத்தம் 16 பாம்புகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
பள்ளியின் பின்புறம் உள்ள புதர்கள் மற்றும் குடியிருப்பு கழிவுநீரால் பாம்புகள் பள்ளி வளாகத்திற்குள் தஞ்சம் புகுவதாகத் தெரிகிறது. இதனால் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள பெற்றோர்கள், ஊராட்சி நிர்வாகம் உடனடியாக புதர்களை அகற்றி சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 அடி நீளம் ராஜ நாகம்
இதேபோல் பந்தலூர் அருகே உள்ள தேவாலா மூச்சுக்குன்னு குடியிருப்புப் பகுதியில் சுமார் 12 அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட ராஜநாகம் ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன்பேரில், வேட்டை தடுப்பு காவலர்கள் நீண்ட நேரம் போராடி அந்த ராஜநாகத்தைப் பத்திரமாக பிடித்தனர்.
பிடிபட்ட பாம்பு பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் ஆறு பாம்புகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் ஒரு ராஜநாகம் என அடுத்தடுத்து பாம்புகள் பிடிபட்டதால், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications