அடுத்தடுத்து பரபரப்பு.. கொடநாடு வழக்கில் கனகராஜ் சகோதரருக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு!
நீலகிரி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் சகோதரர் தனபாலை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
கடந்த 2017ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும், மற்றொரு காவலாளியான கிருஷ்ணா பகதூர் என்பவரது கை, கால்களைக் கட்டிப் போட்ட மர்ம நபர்கள் கோடநாட்டில் இருந்து பல முக்கிய ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

கொடநாடு சம்பவம்
கொடநாடு எஸ்டேட்டில் சி.சி.டி.வி கேமராவை கண்காணித்து வந்த நடுஹட்டியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். அதிமுக ஆட்சியில் இந்த வழக்கு விசாரணைக்குப் பெரியளவில் முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் இந்த கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மறைந்த முன்னாள் முதல்வரின் கார் ஓட்டுநர் கனகராஜ் மற்றும் சயான் மூளையாகச் செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

அடுத்தடுத்து மர்ம சம்பவங்கள்
கொள்ளை சம்பவம் நடைபெற்ற சில நாட்களிலேயே சாலை விபத்தில் சிக்கிய சயான் படுகாயம் அடைந்தார். இந்த வழக்கில் சயான் அளிக்கும் சாட்சியங்கள் பல மர்மங்களுக்கு விடை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் ஜாமீனில் உள்ள சயானிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் ஊட்டியில் வைத்து ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. இது தொடர்பாக போலீசார் இதுவரை நீதிமன்றத்தில் எந்தவொரு அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருந்தது

கனகராஜ் சகோதரர்
கொடநாடு சம்பவத்தில் மற்றொரு முக்கிய நபராகக் கருதப்படும் ஜெயலலிதாவின் ஓட்டுநராகப் பணிபுரிந்த கனகராஜ், கொள்ளை நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு சேலம் ஆத்தூரில் சாலை விபத்தில் உயிரிழந்தார். கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த வழக்கு தொடர்பாகத் தனிப்படை போலீசார் சேலத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொடநாடு கொள்ளை சம்பவம் நடைபெறும் முன்பே கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேசுக்கு தகவல் தெரிந்தும் காவல் துறையினரின் விசாரணையின் போது மறைத்துள்ளனர்.

போலீசார் கைது
எனவே அவர்களைச் சாட்சிகளை மறைத்தல், சாட்சிகளை அழித்தல், சாட்சி சொல்ல விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் கடந்த 25ஆம் தேதி கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் கனகராஜின் சகோதரரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கத் தனிப்படை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.

போலீஸ் காவல் நீட்டிப்பு
இருப்பினும், முதலில் கடந்த கடந்த 28 ஆம் தேதி 5 நாட்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. கனகராஜின் சகோதரருக்கு அளிக்கப்பட்ட போலீஸ் காவல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், மேலும் 5 நாட்கள் விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து கனகராஜின் சகோதரர் தனபாலை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்யத் தனிப்படை போலீசார் தனபாலை அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications