நீலகிரி.. 3 பேரை கொன்ற புலி.. சுட்டுக்கொல்ல தமிழ்நாடு வனத்துறை உத்தரவு
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் 2 நபர்களின் உயிர்களை பறித்த அந்த புலி இன்னொரு நபரையும் அடித்து கொன்றுவிட்டது.. இதனால் கொந்தளித்த பொதுமக்கள், புலியை பிடிக்க வேண்டும் என்று போராடினார். பொதுமக்கள் தொடர்ந்து வைத்து வந்த கோரிக்கையை ஏற்று அதை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு வனத்துறை முடிவு செய்துள்ளது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவன் எஸ்டேட்... இந்த பகுதியை சேர்ந்தவர் சந்திரன்.. 52 வயதாகிறது.. இவர் ஒரு தோட்ட தொழிலாளி..கடந்த 24ம் தேதி இவர் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்... அப்போது திடீரென வந்த ஒரு புலி இவரை கடித்து குதறி கொன்றுவிட்டது.. இதனால் கொந்தளித்த அந்த பகுதி மக்கள், புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறை அதிகாரிகளும், புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதாக மக்களுக்கு உறுதியளித்தனர்.. உடனே, புலி நடமாடும் பகுதிகளில் எல்லாம் கூண்டு வைக்கப்பட்டன.. சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டன.. அங்குள்ள ராட்சத மரங்களில் பரண் போல அமைத்து, அங்கிருந்து கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட துவங்கினர். இதற்காகவே, கேரள மாநிலத்தில் இருந்து வந்துள்ள 15 பேர் கொண்ட குழு, பிரத்யேக உடை அணிந்து, வனப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்தும் வருகிறது..
ஆனால், அதேநேரத்தில் புல்லை மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசு மாட்டை அதே புலி தாக்கி கொன்றுவிட்டது.. இதனால் மக்கள் மேலும் பீதிக்கு ஆளானார்கள்.. இந்த விஷயம் கேள்விப்பட்டு, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அங்கு விரைந்து சென்று, வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், புலியை பிடிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக கூறி, புலி பிடிபடும்வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம், அதுவரை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடு தேடி வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... வெளியூர் மக்கள் வரக்கூடாது என்பதற்காகவே பஸ்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்..
அன்றைய தினம், அங்குள்ள 120 குடும்பங்களுக்கு, சுமார் ஒரு வாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டிருக்கிறது.. இதனிடையே அந்த புலி மேபீல்டு தனியார் எஸ்டேட் பகுதியில் உள்ள முட்புதரிலிருந்து வெளியே வந்து, தேவன் எஸ்டேட் பகுதிக்குள் புகுந்தது.. அதனால், தேவன் எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து 6 நாளாக வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், சிங்காரா வனப் பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்பவரை புலி கடித்து கொன்றது.. அவரது தலைபகுதியை தின்றுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியது.. இதனால் கொந்தளித்து போன மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்... புலியை உடனே பிடிக்க சொல்லி, கோஷமிட்டனர். T23 என்று அந்த புலிக்கு பெயரிட்டுள்ளனர்.. இதுவரை 3 மனிதர்களையும், 30க்கும் அதிகமான கால்நடைகளையும் கொன்றுள்ளது..
முகம், உடலின் பிற பகுதிகளில் அந்த புலிக்கு காயங்கள் இருக்கிறதாம். அந்த காயங்களோடு சோர்வாக தேவன் எஸ்டேட்டில் இருந்து மசினக்குடிக்கு செல்ல தொடங்கியுள்ளது.. அங்கு வைத்தாவது புலியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில், ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடக வனத்துறையினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சூழலில் புலியை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வைத்து வந்த கோரிக்கையை ஏற்று அதை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு வனத்துறை தலைமை அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார். 3 மனித உயிர்களை கொன்ற புலி, மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications