கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு சூப்பர் திட்டம்.. பெண்கள் சேமித்தால் இவ்வளவு வட்டியா?
ஊட்டி: ஊட்டியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்காக "மலையரசி தொடர் வைப்பு" திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை தொகையை சேமித்தால் வட்டி அதிகமாக கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிரின் வங்கி கணக்கில் மாதம் மாதம் 1000 ரூபாய் அரசின் சார்பில் செலுத்தப்படுகிறது. அந்த பணத்தை, தங்களின் அன்றாட செலவுகளுக்கு பெண்கள் பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் மகளிர் உரிமை தொகையை எடுக்காமல் வங்கியில் வைத்திருந்தால் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் 3 முதல் 4 சதவீதம் வட்டி வங்கிகள் வழங்குகின்றன.

இந்நிலையில் ஊட்டியில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்காக "மலையரசி தொடர் வைப்பு" திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை தொகையை சேமித்தால் அதிக வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் நீலகிரி மண்டல இணை பதிவாளர் வாஞ்சிநாதன் இதுபற்றி கோத்தகிரியில் கூறுகையில், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், நீலகிரி மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக புதிதாக "மலையரசி தொடர் வைப்பு திட்டம்" தொடங்கி உள்ளோம்.
மகளிர் உரிமை தொகை சேமிப்பு வட்டி விகிதம்: நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், தற்போது கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு சேமிப்பு கணக்கில் உள்ள பணத்திற்கு 3 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மலையரசி தொடர் வைப்பு திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் வைப்பு திட்டத்தில் ஒரு வருடம் முதல் 5 வருடம் வரை பணம் சேமிக்க முடியும். இந்த திட்டத்தில் பணம் சேமித்தால் 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனவே நீலகிரி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் உள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்" என்று கூறினார்.
நகைக்கடன் தள்ளுபடி: நகைக்கடன் தள்ளுபடி குறித்து பேசிய வாஞ்சிநாதன், "கூட்டுறவுத்துறையின் சார்பில் நீலகிரியில் 20,838 பயனாளிகளுக்கு ரூ.70.57 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. 3,179 சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 31,996 பயனாளிகளுக்கு ரூ.89.53 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளோம். 2023-2024 நிதியாண்டில் 31.10.2023 வரை 12,072 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.112 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டிருக்கிறது" என்றார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷ்ண குமார், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர்கள் அனில் மற்றும் ரவி உள்பட பலர் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டத்தில் மட்டுமல்ல, பல்வேறு வங்கிகளில் ஓராண்டு அல்லது ஐந்தாண்டுகள் பணத்தை எடுக்காமல் பிக்சிட் டெபாசிட்டி மகளிர் உரிமை தொகையை சேமிக்கலாம். அப்படி சேமித்தால் அதற்கு வங்கிகளை பொறுத்து 7 முதல் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது..












Click it and Unblock the Notifications