நடிகை விஜயலட்சுமி சொல்வதில் உண்மை இல்லை.. நான் வெடித்துச் சிதறினால் தாங்கமாட்டீர்கள்.. சீமான் பரபர!
நீலகிரி: நடிகை விஜயலட்சுமி புகாரில் உண்மை இல்லை எனவும், அரசியல் உள்நோக்கம் தான் உள்ளது எனவும் நான் வெடித்துச் சிதறினால் தாங்கமாட்டீர்கள் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதாரங்களுடன் சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார் விஜயலட்சுமி.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு பரப்பி வரும் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று ஊட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் அரசியல் இருக்கிறது. நான் உயர்ந்த லட்சியங்களைக் தூக்கிக் கொண்டு வருகிறேன். நீங்கள் இரண்டு லட்சுமிகளைக் கொண்டு வந்து அவதூறுகளை வீசுகிறீர்கள். அரசியல் களத்தில் இருந்து என்னை வீழ்த்துவதற்கு கையில் எடுத்துள்ள கருவி மிகவும் கேவலமானது.
13 ஆண்டுகளாக தேர்தல் வரும்போதெல்லாம் இந்த பிரச்சனையை கிளப்புகிறார்கள். நான் காதலித்தேன், திருமணம் செய்தேன் என்று விஜயலட்சுமி சொல்கிறார். அப்படியானால் திருமணம் செய்துகொண்ட போது எடுத்த புகைப்படத்தை வெளியிட வேண்டியது தானே? விஜயலட்சுமி விவகாரத்தில் உண்மை இல்லை. இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. என் மீது அவதூறு கூறுவது போலவே நடிகை விஜயலட்சுமி 10 பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி, நான் தன்னை ஏமாற்றியதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் தன்னை ஏமாற்றியதாக கர்நாடகா சமூக வலைதளங்களில் பேசி வருகிறார். இதையே விஜயலட்சுமி வழக்கமாக கொண்டுள்ளார். எனக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ள நிலையில், சமூக சிந்தனையுடன் செயல்படும் என் மீது சமூகத்துக்கு உண்டான செய்திகளைத்தான் பரப்ப வேண்டும்.
கருத்தியல் ரீதியாக என்னை எதிர்கொள்ள முடியாமல் பெண்களை வைத்து அவதூறு பரப்புவது கேவலமான அரசியல். சமூக மரியாதைக்கு கட்டுப்பட்டு நான் அமைதியாக இருக்கிறேன். நான் அமைதியாக இருப்பதால் விஜயலட்சுமி சொல்கிற குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்று நினைக்க வேண்டாம். ஒருநாள் இல்லை ஒருநாள் நான் வெடித்துச் சிதறினால் கட்சிகள் தாங்காது. சமூகத்தில் மரியாதை உள்ள என் மீது அவதூறு பரப்புவதை பொறுக்கமுடியாது" என ஆவேசமாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications