பாஜகவின் பி டீம்.. அமித் ஷாவின் ஸ்கெட்ச் காங்.க்கு இல்லை நிதிஷுக்கு.. சிராக் போட்ட மாஸ்டர் பிளான்?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் எல்ஜேபி கட்சி மோசமாக தோல்வி அடைந்து இருந்தாலும்.. அந்த கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் மிகப்பெரிய கேம் சேஞ்சாராக உருவெடுத்துள்ளார். சிராக்கின் எழுச்சிக்கு பின் அமித் ஷாதான் இருக்கிறார் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் பலர் சந்தேகம் கொள்ள தொடங்கி உள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய வெற்றிபெற்றுள்ளது. பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி வெறும் 110 இடங்களில் வென்று.. தோல்வியை தழுவி உள்ளது.
இந்த தேர்தலில் வெற்றிபெற்று இருந்தாலும் கூட.. நிதிஷ் குமார்தான் முதல்வரா என்று சந்தேகம் வந்துள்ளது. நிதிஷ் குமாரை முதல்வராக பதவி ஏற்க பாஜக அனுமதிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
என்ன செய்தார்
பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி 125 இடங்களில் வென்று இருந்தாலும் ஐக்கிய ஜனதா தளம் குறைவான இடங்களில்தான் வென்று உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும்தான் வென்று இருக்கிறது.. இதனால் அதிக இடங்களை வென்ற பாஜக கூட்டணிக்குள் முதல்வர் பதவியை கேட்க வாய்ப்புகள் உள்ளது.
நிதிஷ் வீழ்ச்சி
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெற்றிபெறும் என்று கருதப்பட்ட பல்வேறு தொகுதிகளில் அந்த கட்சி தோல்வி அடைந்தது. பெரும்பாலான இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் அடைய சிராக் பாஸ்வானின் எல்ஜேபி கட்சிதான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு செல்ல வேண்டிய வாக்குகளை பிரித்து.. ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர்கள் பலர் தோல்வி அடைய சிராக்தான் மறைமுக காரணமாக என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது
பீகாரில் கிட்டத்தட்ட 10-12 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 10 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இங்கெல்லாம் சிராக் கட்சி 12-15 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளது. ஒருவேளை சிராக் தனியாக நிற்காமல் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் நின்று இருந்தால்... இந்த இடங்களில் எல்லாம் நிதிஷ் வென்று இருக்க வாய்ப்புள்ளது.
பின்னணி
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமித் ஷா செய்த ராஜதந்திரம்தான் இது என்று கூறப்படுகிறது. ஆம்.. வேண்டும் என்றே.. சிராக்கை தனியாக நிற்க வைத்து.. அவரை வைத்து நிதிஷ் குமாரின் வெற்றியை பாஜக குறைத்துள்ளது என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமார் பீகார் மாநிலத்தில் செலுத்தும் அதிகாரத்தை குறைத்து.. பாஜகவை தனிப்பெரும் கட்சியாக கொண்டு வர களமிறக்கப்பட்டவர்தான் சிராக் என்று கூறப்படுகிறது.
பீ டீம்
காங்கிரஸ் கூட்டணியின் வாக்குகளை பிரிக்கவே சிராக் களமிறக்கப்பட்டார் என்று பலரும் கருதும் நிலையில்.. ஸ்கெட்ச் காங்கிரசுக்கு இல்லை.. நிதிஷுக்கு என்று கூறுகிறார்கள். நிதிஷ் அதிக இடங்களில் வென்றால் தானே முதல்வர் பதவியை கேட்பார்.. அதனால் அவரை அதிக இடங்களில் வெல்ல விட கூடாது என்றுதான் சிராக்கை பாஜக களமிறக்கியது என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது.
நிதிஷ் குமார்
நிதிஷ் குமார் கட்சியில் இருக்கும் தொண்டர்களே இந்த சந்தேகத்தை வைத்துள்ளனர். சிராக் இன்னும் தேசிய அளவில் பாஜக கூட்டணியில் இருக்கிறார், பாஜக தலைவர்கள் யாருமே சிராக்கிற்கு எதிராக வாய் திறக்கவில்லை... இதை பார்த்தால் குழந்தைக்கு கூட சிராக் - பாஜக உறவு புரிந்துவிடும்.. நிதிஷ்தான் புரிந்து கொள்ளாமல் ஏமாந்து விட்டார் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இது எல்லாமே அமித் ஷாவின் திட்டம் என்றும் ஜெடியூ கட்சியினர் பலர் நம்புகிறார்கள்.
எப்படி
நிதிஷ் குமாருக்கு இந்த முறை முதல்வர் பதவியை பாஜக கொடுக்க வாய்ப்புள்ளது.. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக நிதிஷ் குமாரின் செல்வாக்கை சரிய வைக்கவே சிராக் கொண்டு வரப்பட்டுள்ளார். பாஜகவின் தொலைநோக்கு திட்டம் இது. எதிர்காலத்தில் பீகாரை தனியாக பிடிக்க பாஜக பிளான் போடுகிறது .. நிதிஷ் இருந்தால் அது நடக்காது என்பதால்.. அவரின் செல்வாக்கை சரிக்க இப்படி சிராக்கை அமித் ஷா கொண்டு வந்துள்ளார் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் பலர் சந்தேகம் கொள்கிறார்கள்.