ஏங்க அதுக்காக 8 மாசமாவா.. இப்படி ஒரு மோசடியை கற்பனையும் செய்ய முடியாது.. "போலி போலீஸ் ஸ்டேஷன்"
பாட்னா: பீகாரில் பல மாதங்களாக ரவுடிகள் நடத்தி வந்த போலி காவல் நிலையம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
காவல்துறை அதிகாரிகள் போல வேடமிட்டு ஏமாற்று பேர்வழிகள் மக்களிடம் இருந்து பணத்தை பறித்த சம்பவங்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சிலர் போலியாக காவல் நிலையத்தையே நடத்தி வந்தது குறித்து இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோமா? ஆம், உண்மையிலேயே இப்படியொரு சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. தமிழகத்தை போல அல்லாமல் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் மாவட்டம்தோறும் ஏராளமான ரவுடிகள் கும்பல் கும்பலாக இயங்கி வருவார்கள். தமிழகத்தில் ஒரு ரவுடியை கைது செய்வது போல பீகாரில் ஒரு ரவுடி கும்பலை நெருங்குவது எளிதல்ல. அரசியல் செல்வாக்கு, ஆள் பலம் என ஒவ்வொரு ரவுடிக்கும் அங்கு பெரிய பின்புலம் இருக்கும். எனவே பெயர்போன ஒரு ரவுடி கும்பலை நெருங்குவதற்கு போலீஸாரே மிகவும் தயங்குவார்கள்.

பீகாரில் பாங்கா மாவட்டத்தில் இதுபோன்ற ஒரு பெரிய ரவுடி கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த ரவுடி கும்பலில் இருப்பவர்களுக்கு கொலை, கொள்ளை, கடத்தல், பணப்பறிப்பு உள்ளிட்ட வேலைகளை முடிக்க அசைன்மென்ட் கொடுக்கப்படும். அந்த வகையில், இந்த ரவுடி கும்பலில் இருக்கும் சிலருக்கு கடந்த ஆண்டு இறுதியில் ஒரு அசைன்மென்ட் வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, போலியாக காவல் நிலையத்தை நடத்தி மக்களிடம் இருந்து எவ்வளவு பணம் பறிக்க முடியுமோ அதனை செய்ய வேண்டும் என்பதுதான் அந்த அசைன்மென்ட்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் பாங்கா நகரில் உள்ள அனுராக் கெஸ்ட் ஹவுஸ் என்ற ஹோட்டலை தேர்ந்தெடுத்த 6 ரவுடிகள் அங்குள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து காவல் நிலையமாக மாற்றினர். அவர்களில் இரு பெண்களும் அடங்குவர்.
காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர் என்ற ரேங்க் வாரியாக போலீஸ் உடைகளையும் வாங்கி அவர்கள் அணிந்து கொண்டனர். மேலும், அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகளை உறைக்குள் வைத்துக் கொண்டனர். பார்ப்பவர்களுக்கு சிறிதும் சந்தேகம் வராத வகையில் அவர்கள் தன்னை ஒரிஜினல் போலீஸார் போலவே மாற்றிக் கொண்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பகுதியில் உள்ள நிஜ போலீஸ் உயரதிகாரியின் வீட்டுக்கு பக்கத்தில்தான் அவர்கள் போலி காவல் நிலையத்தை அமைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் யாருக்கும் இவர்கள் மீது சந்தேகம் வரவில்லை.
காவல் நிலையம் அமைக்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே அப்பகுதி மக்கள் புகார் கொடுக்க காவல் நிலையம் வர தொடங்கினர். அவ்வாறு வரும் மக்களிடம் இருந்து அவர்களிடம் உள்ள புகாரை பொறுத்து ரவுடி போலீஸார் பணம் பறிக்க தொடங்கினர். மேலும், அப்பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்தும் அவர்கள் மாமூல் வசூலிக்க தொடங்கினர். இதனால் மாதந்தோறும் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு கிடைத்தது. இவ்வாறு 8 மாதங்களாக போலி காவல் நிலையத்தை அவர்கள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த நிஜ காவலர் ஒருவர் இந்த போலி போலீஸாரை பார்த்திருக்கிறார். அப்போது அவர்களிடம் இருந்த துப்பாக்கி நாட்டு துப்பாக்கி வகையைச் சேர்ந்தது என்பதை அவர் கண்டறிந்தார். இதையடுத்து, இதுகுறித்து தனது உயரதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணித்த போது அவர்கள் போலி போலீஸார் என்பதும், போலி காவல் நிலையத்தை அவர்கள் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 16-ம் தேதியன்று போலி காவல் நிலையத்துக்கு சென்ற 10-க்கும் மேற்பட்ட போலீஸார், போலிஸ் உடையில் இருந்த ரவுடிகளை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள், போலி முத்திரைகள் உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பீகாரில் ரவுடிகள் போலியாக காவல் நிலையத்தையே அமைத்து அதை 8 மாதங்களாக நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications