ஜியோ சிம் ஒர்க் ஆகலை.. நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு.. முகேஷ் அம்பானியை ஆடிப்போக வைத்த உத்தரவு
பாட்னா: பீகாரில் ஜியோ சிம் வாடிக்கையாளர் ஒருவர், தனது சிம் பிளாக் செய்யப்பட்ட விவகாரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானிக்கு முசாபர்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அக்டோபர் 29-ம் தேதி கமிஷன் முன்பு அம்பானி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரிஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தான் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆவார். ஜியோ சிம் பிரச்சனையால் அவதிப்பட்ட வாடிக்கையாளர் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் மூலம் அளித்த புகாரும், அதற்காக நுகர்வோர் குறைதீர் ஆணையம் அம்பானிக்கு அனுப்பியுள்ள நோட்டீசும் இப்போது பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.

பீகாரின் முசாபர்பூரின் பிரம்மபுரா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஜூரன் சாப்ரா சாலை வசித்து வரும் இளைஞர் விவேக் குமார். இவர் முசாபர்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் கமிஷனில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் அவர் கூறுகையில், என் பெயர் விவேக்குமார். நான் ஐடியா நெட்வொர்க்கில் இருந்து எனது சிம்மை ஜியோவிற்கு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு போர்ட் செய்தேன். அந்த நேரத்தில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தேன். அன்று முதல் நான் ஜியோ வாடிக்கையாளராக இருந்து வருகிறேன்.
ஆனால் சில மாதங்களுக்கு முன்னால் என்னுடைய ஜியோ சிம்மை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஜியோ நிறுவனம் முடக்கியிருக்கிறது. இது தொடர்பாக நான் ஜியோ அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்தேன். ஆனால் அவர்கள் என் சிக்கலைத் தீர்க்கவில்லை. புகார் அளித்த பின்னரும் என்னுடைய பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.
ஆனால் ஜியோ நிறுவனமோ நான், மே 25, 2025 வரை வாடிக்கையாளராக இருப்பதாகவே காட்டியது. இதனால் தொடர்ந்து ரீசார்ஜ் செய்தேன். ஆனால் என்னுடைய மொபைல் எண் வேலை செய்யாததால் எதுவும் செய்ய முடியவில்லை. ரீசார்ஜ் ஆகவில்லை. என்னுடைய எண் பிளாக் செய்யப்பட்டதால் பணிகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எனக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.10.30 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.
எனது வேலை தொடர்புடைய அனைத்து நபர்களிடமும் பிளாக் செய்யப்பட்ட செல்போன் எண் தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் எனக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. எனவே முசாபர்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதுபற்றி மனித உரிமை வழக்கறிஞர் எஸ்.கே.ஜா கூறும் போது, "இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடர்பான மோசமான சேவைகள் தொடர்பான வழக்கு. பொதுவாக சேவை வழங்குநர் நுகர்வோருக்கு சேவையை முறையாக வழங்கத் தவறினால் வழக்கு தொடரலாம். அந்த வகையில் அவர் புகார் அளித்துள்ளார்" என்று கூறினார்.
இந்த புகாரை விசாரித்த முசாபூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் முசாபர்பூரில் உள்ள ஜியோ அலுவலகத்தின் கிளை மேலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்கள், இருவரும் அக்டோபர் 29ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications