வலுவடைகிறதா மூன்றாவது அணி? பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் கேசிஆர் சந்திப்பு.. பின்னணி!
பாட்னா: பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்துள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலம் உருவான 2014ல் இருந்து தற்போது வரை சந்திரசேகர ராவ் தான் முதல்வராக இருக்கிறார். இதனிடையே தெலங்கானாவில் கால்பதிக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.
ஆனால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தேசிய அளவில் மூன்றாவது அணியை அமைக்க முயன்று வருகிறார். அதுமட்டுமல்லாமல் மத்திய பாஜக அரசை முழு முனைப்புடன் கேசிஆர் எதிர்த்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், 2024ல் பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்க மக்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கூறியதோடு, பிரதமர் நரேந்திர மோடியை "கோல்மால் பிரதமர்" என்றும் கடுமையாக விமர்சித்தார்.

மூன்றாவது அணி?
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக ஏற்கனவே டெல்லி சென்ற கேசிஆர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அதேபோல் பஞ்சாப் சென்று முதல்வர் பகவந்த் சிங் மானை சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது பீகார் மாநிலத்திற்கு சென்றுள்ளார். பீகார் மாநிலம் சென்ற சந்திர சேகர ராவை, அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வரவேற்றனர்.

நிவாரண உதவி
இதனைத்தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவி வழங்கினார். அதேபோல் தெலங்கானாவில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காசோலை வழங்கினார். இந்த சந்திப்பின் போது தேசிய அரசியல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கேசிஆர் முயற்சி
அண்மைக் காலமாக பாஜகவுக்கு எதிராக மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, நிதீஷ் குமார் உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் கேசிஆர் ஈடுபட்டு வருகிறார்.

பாஜக விமர்சனம்
கேசிஆர் - நிதீஷ் குமார் சந்திப்பு குறித்து பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி கூறுகையில், சொந்த மாநிலத்தில் தங்களின் அடித்தளத்தை இழந்து, பகல் கனவு காணும் இரு தலைவர்களின் சந்திப்பு என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications