321 கிலோ எடையில் பிரம்மாண்ட சாக்லெட் சிலை.. புதுவையில் அபிநந்தனுக்கு கெளரவம்
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள சாக்லெட் கடை ஒன்றில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கௌரவிக்கும் நோக்கில் 321 கிலோ எடைகொண்ட பிரம்மாண்ட சாக்லெட் சிலையை உருவாக்கியுள்ளனர்.
கிறிஸ்துமஸ் என்றாலே நம் நினைவிற்கு வருவது கேக் தான். கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கிறிஸ்துவவர்கள் மற்றும் பேக்கரிகள், நட்சத்திர விடுதிகளில் விதவிதமான வடிவங்களில் கிறிஸ்துமஸ் கேக் செய்து அசத்துவது வழக்கம்.
கேக் தயாரிக்கும் பணியை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கி விடுவர். அந்தளவிற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையில் கேக்கிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில் புதுச்சேரியில் தற்போதே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.
இந்நிலையில் புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள சாக்லெட் கடை ஒன்று, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வித்தியாசமான முறையில் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளில் சாதனைபடைத்தவர்களின் உருவ சிலைகளை சாக்லெட்டை கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கி காட்சிப்படுத்தி வருகிறது. இந்தாண்டு
விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கௌரவிக்கும் விதமாக அவருக்கு பிரம்மாண்ட சாக்லெட் சிலை செய்து அசத்தியுள்ளனர்.
புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், இந்திய இராணுவம் நடத்திய பதில் தாக்குதலின்போது, பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணவ பிடியில் இருந்தபோது, இந்திய நாட்டை விட்டுகொடுக்காமல், தைரியத்துடன் செயல்பட்டதால் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரின் பாராட்டுகளை பெற்ற அபிநந்தனின் உருவம் சாக்லேட்டால் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், விங் கமாண்டர் அபிநந்தன் சிலை 321 கிலோ சாக்லெட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 5 அடி 10 அங்குலம். இந்த சாக்லெட் சிலை செய்ய பெல்ஜியமிலிருந்து சாக்லெட் கொண்டுவரப்பட்டு, ஊழியர் ஒருவரின் 124 மணி நேர கடின உழைப்பால் உருவாக்கி தற்போது பொதுமக்களின் பார்வைக்காக காட்சிபடுத்தியுள்ளோம். வீரத்தின் வாயிலாக நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த விங் கமாண்டர் அபிநந்தனுக்காக இந்த சாக்லேட் சிலை உருவாக்கப்பட்டதற்கு பெருமைப்படுகிறோம் என்றார்.
தற்போது அந்த சாக்லெட் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அபிநந்தனின் சிலையை ஆச்சரியத்துடன் பார்ப்பது மட்டுமின்றி, சிலை முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.