தேர்தலை ரத்து பண்ணுங்க.. 2 கட்சியிலும் பணம் விளையாடுது.. அதிர வைத்த அதிமுக.. புதுச்சேரியில் பரபர!
புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தேர்தலை புறக்கணிப்பதாக புதுச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19ஆம் தேதி) மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 19 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 26 பேர் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், பாஜக சார்பில் மாநில உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம், அதிமுக சார்பில் தமிழ் வேந்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ், அதிமுக, பாஜக, நாதக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பணம் கொடுப்பதாக அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் புகார் தெரிவித்துள்ளார்.
இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன், "புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பணம் விளையாடுகிறது. பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் வாக்காளர்களுக்கு ரூபாய் 500 வீதம் பணம் கொடுத்து வருகிறார்.
அதேபோல காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சார்பில் வாக்காளர்களுக்கு ரூபாய் 200 பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இங்குள்ள தேர்தல் அதிகாரி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன்.
இரண்டு வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதால் புதுச்சேரி தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். நேர்மையாக தேர்தலை நடத்த முற்படாவிட்டால் இந்த தேர்தலை புறக்கணிப்பேன்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சியினரை தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் தடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுடன் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை தடுக்கவில்லை. இந்த தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெறவில்லை என்று கோஷம் எழுப்பினர். லோக்சபா தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற அதிமுக வேட்பாளரின் கோரிக்கையால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications