ஆளுநருக்கு எதிராக தர்ணா... குடியரசுத் தலைவர், பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் உள்துறைக்கு அம்மாநில முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மாநில வளர்ச்சிக்கு ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் 13ம் தேதியில் இருந்து ஆளுநர் மாளிகை முன் தர்ணா போராட்டத்தை தொடங்கினர்.
இவர்களை கண்டுகொள்ளாமல் நேற்று முன்தினம் ராஜ் நிவாசில் இருந்து ஆளுநர் கிரண்பேடி வெளியேறி, சென்னை சென்றார். பின்னர், அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். முதல்வர், அமைச்சர்களை புறக்கணித்து ஆளுநர் வெளியேறியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே, போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து முதல்வர் நாராயணசாமி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் நேற்று மாலையில் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: நான்கு நாட்களாக தர்ணா போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை தடுக்கும் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து, குடியரசு தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
இதேபோல் புதுச்சேரியில் நடைபெற்றுவரும் நிலவரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கும் கடிதம் எழுதினேன். புதுச்சேரி மாநில கோரிக்கைகள் குறித்தும், கிரண்பேடியை மாற்றக்கோரியும் இன்று பிற்பகல் உள்துறை அமைச்சரை புதுச்சேரி மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாசினிக், அஹமது பட்டேல், ராகுலின் அரசியல் ஆலோசகர் ஆகியோர் சந்தித்து வலியுறுத்த உள்ளனர் என்றார்.