அதிகம் பணம் சம்பாதிக்க.. மதுக்கடைகளை ஏலம் விடலாம்.. கிரண்பேடி வலியுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் வருவாயை பெருக்க மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் புதுச்சேரி, தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. இதனிடையே மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அளித்ததை தொடர்ந்து, தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மதுக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒப்புதல் கேட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கோவிட் வரியை உயர்த்துமாறு தெரிவித்து ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார்.
இதனால் புதுச்சேரியில் மதுக்கடைகளை திறப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் பெரும்பாலும் மதுக்கடைகள் தனியார் வசம் உள்ளதால், வருவாயை பெருக்க மதுக்கடை உரிமங்களை ஏலம் விட பொதுவான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும் என துணைநிலை கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கிரண்பேடி கூறுகையில், ஆளுநர் மாளிகை கடந்த 4 ஆண்டுகளாக மதுக்கடைகளுக்கான உரிமங்களை ஏலம் விட ஒரு பொதுவான கொள்கை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் புதுவை மாநில கருவூலத்துக்கு வருவாயை கணிசமாக உயர்த்த முடியும். மின்சாரம், வணிகவரி மற்றும் சொத்துவரி உள்பட பல நிலுவைதொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.
குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடு தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை செயல்படுத்த கூறினேன். அரசு சொத்துகளை மீட்கவும், வாடகை வருவாயை சீரமைக்கவும் வலியுறுத்தப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது உடனடி அபராத முறையை கொண்டு வந்து அதை சாலை பாதுகாப்பு நிதி கணக்கில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிநாராயணன் கடிதத்தின் அடிப்படையில் திட்டங்களை புதுவை அரசு செயல்படுத்தினால் ரூ.4 ஆயிரம் கோடி பெற முடியும். அவரது கடிதத்தை புதுவை அரசு பார்க்க வேண்டும். அரசு இந்த ஆதாரங்களின் அடிப்படையை நோக்குவது அவசியம். மத்திய அரசும் பல நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளது.
இதுபோன்ற நிலையை புரிந்து கொண்டு, அதை செயல்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அரசின் கடமை. அத்துடன் வளங்களை திரட்டவும், அரசாங்க நிதியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் ஒரு கூட்டு அரசியல் விருப்பம் தேவை. மக்கள் பிரதிநிதிகள் தங்கள் திட்டங்களை பின்பற்ற முடிவெடுப்பவர்களுடனே தொடர வேண்டும். இதற்கு கவர்னர் அலுவலகம் முழு ஆதரவையும் வழங்கும் என கிரண்பேடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications