"இதான் லாஸ்ட்".. எல்லாமே மாறுது.. இப்ப கி. வீரமணியும் சொல்லிட்டாரு.. ரெடியாகும் கட்சிகள்.. ஷாக் பாஜக
புதுச்சேரி: மறுபடியும் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அது தான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தலாக இருக்கும் என்று மூத்த தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளது, அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. மேலும், பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை அமைப்பதிலும் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த சில வருடங்களாகவே, பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட மம்தா பானர்ஜி களமிறங்கினார்.. ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவும் இதற்கான முயற்சியை கையில் எடுத்து தோற்றுவிட்ட நிலையில், மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே என பெருந்தலைகள் இறங்கியுள்ளனர்..

பாஜக எதிர்ப்பு
எனினும் இதில் இதுவரை பெரிய பலன் கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.. ஆனால், இவர்கள் அனைவரையும்விட, "பாஜக எதிர்ப்பு" விஷயத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து உறுதியாக இருப்பதால், அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிட்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. திமுகவை பொறுத்தவரை தன்னுடைய கருத்தியலில் எப்போதுமே உறுதிப்பாட்டுடன் பயணித்தாலும், தன்னுடைய சித்தாந்தங்களையும், கொள்கைகளையும் யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை.. அதேசமயம், தமிழக மக்களின் நலன்களை பெற்றுத்தர, மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகிறது..

காய் நகர்த்தல்
அதுமட்டுமல்ல, அந்த பக்கம் மம்தா, இந்த பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால், இதற்கு நடுவில் பினராய் என மாநில வாரியான ஆதரவையும், நல்லிணக்கத்தையும் ஸ்டாலின் கடைப்பிடித்து வருகிறார்.. இதில், தங்களுக்கு நேர் அரசியல் எதிரியான ஆம் ஆத்மியுடன் ஸ்டாலின் நெருக்கம் காட்டி வருவது, காங்கிரசுக்கு ஒருவித உறுத்தலை தந்தாலும், மிக சரியான காய்நகர்த்தலுடன்தான் பயணிக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதாவது, தேசிய அரசியலில் பல கட்சிகள் ஆதரவை பெற்றால்தான், பாஜகவை வீழ்த்த முடியும் என்பதே ஸ்டாலினின் கணக்காக உள்ளதாக சொல்கிறார்கள்.. அதனால்தான், "பிரதமர் யார் என்பதைவிட, பிரதமராக யார் வந்துவிடக்கூடாது" என்பதில்தான் அதிக கவனத்தை செலுத்தி, பாஜகவை வீழ்த்தும் கூட்டணியை வலுப்படுத்த நினைக்கிறாராம்.

ஓரணி
அந்தவகையில், பாஜகவுக்கு எதிரான அணி திரள வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் இருந்தும் வெடித்து கிளம்பி உள்ளது.. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் தொடர்ந்து இதற்கான அறைகூவலை விடுத்தபடியே உள்ளார்.. ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும்.. அனைவருமே ஓரணியில் திரண்டு இதற்காக போராட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்து வருகிறார்.. அந்தவகையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் இதே கோரிக்கையை அழுத்தமாக வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் திராவிட கழகம் சார்பில் சமூகநீதி பாதுகாப்பு மற்றும் திராவிடமாடல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சுடுகாடு
புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள ஜீவா சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பேசிய திராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி, "ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லும் பாஜகவினர், நாட்டில் ஒரே ஜாதி என்று சொல்லிவிட்டால் திராவிட கழகமும் அவர்களுடன் (பாஜகவினருடன்) வருகிறோம்.. நாட்டில் சுடுகாட்டில் கூட பேதம் உள்ளது.. வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மறுபடியும் மத்தியில் மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்தால், அது தான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தலாக இருக்கும்.. சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை காப்பற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி, ஆட்சி மாற்றத்திற்கு வர வேண்டும்" என்றார் வீரமணி.

சுணக்கம்
3வது முறையாக மறுபடியும் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ள நிலையில், பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய எதிர்கட்சிகள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டு, ஒன்றிணைவது குறித்து விவாதித்தும் வருகின்றன.. ஆனாலும் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வியால் கூட்டணி ஏற்படுவதில் "சுணக்கம்" ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட இந்தநிலையில், மோடி மட்டும் ஆட்சிக்கு வந்தால் அது தான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தலாக இருக்கும் என்று கி.வீரமணி எச்சரித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications