அப்பாடா.. கடலூர் தொழிலாளிக்கு நிபா பாதிப்பு இல்லை.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு
புதுச்சேரி: கேரளாவில் பணியாற்றி வந்த கடலூரை சேர்ந்த ஒருவர் நிபா வைரஸ் அறிகுறியுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு நிபா வைரஸ் இல்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாடராஜன் (52). இவர் கேரளா மாநிலம் குருவாயூரில் கூலி வேலை செய்துவந்துள்ளார். நடராஜனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிக காய்ச்சல் ஏற்பட்டதால், சொந்த ஊரான கடலூருக்கு திரும்பியுள்ளார்.

பின்னர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருந்ததால் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நடராஜனின் இரத்த மாதிரிகளை பூனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு நிபா வைரஸ் பரிசோதனைக்காக ஜிப்மர் மருத்துவமனை அனுப்பியிருந்த நிலையில், நடராஜனுக்கு நிபா வைரஸ் தாக்கவில்லை என புனேவிலிருந்து சோதனை முடிவுகள் வந்துள்ளன.
இந்த சோதனை முடிவின் மூலம் கடந்த இரண்டு நாட்களாக நிபா வைரஸ் தாக்குதல் குறித்து பீதியடைந்திருந்த புதுச்சேரி மற்றும் கடலூர் மக்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர். இதனிடையே, நிபா வைரஸ் நோய் பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவுகிறது. எனவே அணில், வவ்வால்கள் கடித்த பழங்களை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். பலாப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம் போன்றவற்றை சுத்தமாக கழுவியபிறகுதான் சாப்பிட வேண்டும்.

மேலும், நிபா வைரசால் தாக்கப்படுவோருக்கு, காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், குழப்பமான மனநிலை போன்றவை ஏற்படும். சிலருக்கு நினைவு தப்பி, கோமா நிலைக்கு சென்று உயிரிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications