மக்கள் எங்களை தான் கேள்வி கேட்பார்கள்.. கிரண்பேடி ஒத்துழைக்க வேண்டும்.. புதுவை முதல்வர் பேட்டி
Recommended Video
புதுச்சேரி: புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வனி குமார் உள்ளிட்ட பல்வேறு துறை செயலர்கள் பங்கேற்றனர்.
மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கான அதிகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய நிலையில், இந்த தீர்ப்புக்கு தடை கோரி கிரண்பேடி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அமைச்சரவை கூட்டத்தில் நிதி சம்பந்தமான முடிவுகள் எடுத்தால் அதனை செயல்படுத்த 10 நாட்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
அமைச்சரவை கூட்டத்தில் நிதி தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மறைந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதாகவும், தற்போதுள்ள ஆதிதிராவிட நலத்துறையை ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை என மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்
மேலும் இலவச அரிசி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என புதுவை அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நிபா வைரஸ் தாக்கத்திலிருந்து புதுச்சேரி மக்களை பாதுகாக்க அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது, நிபா வைரஸ் தாக்குதல் குறித்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்
தலைமை செயலக ஊழியர்கள் சில நாட்களாக குறித்த நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருவதில்லை. அரசு சார்ந்த சான்றிதழ்கள் வழங்குவதில் அரசு ஊழியர்கள் தாமதம் ஏற்படுத்துகின்றனர் மேலும் கோப்புகள் தேங்கியுள்ளதாக புகார்கள் குவிந்ததால், இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது பெரும்பாலான தலைமை செயலக ஊழியர்கள் 25 சதவிகிதத்தினர் விடுப்பு எடுத்திருந்ததால் அதிகாரிகளிடம் விடுப்பிற்கான அனுமதி கடிதத்தினை கேட்டறிந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, அரசு ஊழியர்கள் குறித்த நேரத்திற்கு அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும் எனவும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோ மெட்ரிக் ஒரு மாதத்திற்குள் பொறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலைமை செயலரிடம் வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
மக்களுக்கு பணி செய்யவே அரசு ஊழியர்கள் உள்ளனர். ஆகவே ஊழியர்களின் வருகை குறித்து தொடர்ந்து நானும் அமைச்சர்களும் ஆய்வு மேற்கொள்வோம் என்றார். துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்படும் மக்கள் நல திட்டங்கள் சார்ந்த கோப்புகள் எந்தவித காரணமும் இல்லாமல் திரும்பி வருகின்றன. கிரண்பேடி மீது தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் எனக்கு கிடையாது
துணை நிலை ஆளுநர் மாநில அரசு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றால் ஆளுநரை மக்கள் கேட்க மாட்டார்கள். எங்களை தான் கேட்பார்கள். தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் 24 மணி நேரமும் வணிக வளாகங்கள் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளதால் இது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.