நல்ல நேரம் பார்த்து.. வாக்குச்சாவடியில் 5 நிமிடம் காத்திருந்து.. வாக்கினை பதிவு செய்த ரங்கசாமி!
புதுச்சேரி: புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வாக்குச்சாவடியில் 5 நிமிடம் காத்திருந்து நல்ல நேரம் பார்த்து வாக்கினை பதிவு செய்தார்.
இன்று வாக்குப்பதிவு நடக்கும் 5 மாநிலங்களில் புதுவையில்தான் இதுவரை அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுவையில் தேர்தல் மும்முரம்
புதுவையில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மதியம் 1 மணி நிலவரப்படி புதுவையில் 53.76% வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுவையில்தான் அதிகம்
அதாவது இன்று வாக்குப்பதிவு நடக்கும் தமிழ்நாடு, கேரளா, அஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் புதுவையில் மட்டும்தான் இதுவரை அதிகபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னதாக புதுவை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்தார்.
பைக்கில் வந்த ரங்கசாமி
தனது வீட்டின் அருகே உள்ள திலாசுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வழக்கம்போல் பைக்கில் வந்தார் ரங்கசாமி. ஆனால் வாக்குச்சாவடிக்கு வந்தும் அவர் உடனடியாக வாக்களிக்கவில்லை.
நல்ல நேரம் பார்த்து வாக்களித்தார்
''நல்ல நேரத்துக்கு இன்னும் 5 நிமிடங்கள் உள்ளது. அதன்பின்னர் நீங்கள் வாக்களியுங்கள்'' என்று ரங்கசாமியின் ஆதரவாளர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டனர். இதனால் சுமார் 5 நிமிடங்கள் அங்கு காத்திருந்த ரங்கசாமி பின்னர் வாக்களித்து விட்டு அங்கு இருந்து புறப்பட்டுச் சென்றார்.