அரிசிக்குள் சரக்கு.. புதுச்சேரிக்கு மதுபாட்டில் கடத்திய இருவர்.. 37 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல்!
புதுச்சேரி: தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரிசி பைக்குள் மறைத்து வைத்து டாஸ்மாக் மதுபாட்டில்களை நூதன முறையில் கடத்தியவர்களை திருக்கனூர் காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 37 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 4 வது கட்டமாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகள் மூடப்பட்டது. தற்போது, பல்வேறு பிரச்சனைக்கு இடையே கடந்த 16-ம் தேதி மீண்டும் தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

ஆனால், புதுச்சேரியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. நாளைதான் புதுச்சேரியில் மதுபானக் கடைகளை திறக்கப்போவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதனால், புதுச்சேரியை சேர்ந்த குடிகாரர்கள், தமிழக எல்லை பகுதியில் உள்ள மதுபான கடைகளுக்கு சென்று, தமிழக மதுபாட்டில்களை புதுச்சேரிக்கு கடத்தி வரும் செயலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் விதமாக புதுச்சேரி எல்லைகளில் போலீசார் தீவிர சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருக்கனுார் எல்லைப் பகுதியில் ஆய்வாளர் கிட்லா சத்தியநாராயணா, உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, விழுப்புரம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கட்டை பைகளுடன் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது கட்டைபையில் அரிசிக்குள் தமிழக மதுபாட்டில்களை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் பெரியபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்த தீபக் (28), முத்துவேல் (31) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 37 தமிழக மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் போலீசார் அவர்களை மதுபாட்டில்களுடன் கலால்துறையிடம் ஒப்படைத்தனர். எல்லையில் போலீசாரின் சோதனைச் சாலை வழியே நடைபெறுவதால், சிலர் வயல்வெளி வழியாக மது பாட்டிலை கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்ததை தொடர்ந்து வயல்வெளியிலும் போலீசார் கூடுதல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications