புதுச்சேரியிலும் ஏப்ரல் 30 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்திலும் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 8 பேர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். மேலும் மாஹேவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 6 பேரில், 4 பேரின் உடல்நிலை சீராக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் கட்டுப்பாடாக உள்ளனர். புதுச்சேரியில் 90 சதவீத மக்கள் ஊரடங்கிற்கு கட்டுப்பட்டு வீட்டில் உள்ளனர். 10 சதவீத மக்கள் மட்டும் ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றி வருகின்றனர். அவர்களையும் கட்டுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயம் செய்வதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை. விவசாய இடுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும். மீனவர்கள் தடையில்லாமல் மீன்பிடிக்க செல்லலாம். மீன் விற்பனை செய்யும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
புதுச்சேரியில் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மட்டும் கொரோனா வைரசிற்காக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் மக்கள் வழக்கம்போல் மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம். சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் திறந்திருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் மருத்துவம் பார்க்க மறுத்தால், அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கட்சிக்கு, ஒரு தலைவர் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். கூட்டம் கூடினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க இந்திய நாடு முனைப்பாக இருக்க வேண்டும். அதற்கு நாமும் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அண்டை மாநிலமான தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால், புதுச்சேரி மாநிலத்திலும், ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படுவது கடுமையான முடிவாக இருந்தாலும், மக்களின் உயிரை காப்பதற்காக இந்த முடிவை அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுபோல், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் திறந்திருக்கும். குறிப்பிட்ட தொழிற்சாலைகளை மட்டும் திறப்பது குறித்து ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும். அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் ஊரடங்கு நீட்டிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளையும் புதுச்சேரி அரசு பின்பற்றும் என்றார் முதலமைச்சர் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications