"அனைத்திலும் அரசியல் என்றால்.. நல்லுறவுடன் இருக்க முடியாது" சொல்கிறார் ஆளுநர் தமிழிசை.. என்னாச்சு
புதுச்சேரி: தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்து இருந்த நிலையில், இது தொடர்பாகத் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களிலும் மாநில அரசுக்கும் சம்மந்தப்பட்ட மாநில ஆளுநர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
தமிழ்நாட்டிலும் கூட ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதலே அவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை.

தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டசபையில் இயற்றப்படும் மசோதாக்கள் எதற்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழ்ப் புத்தாண்டையொட்டி தமிழக ஆளுநர் சார்பில் தேநீர் விருந்து அறிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தது

தேநீர் விருந்து
அதேநேரம் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றன. இந்தச் சூழலில் தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரியிலும் தேநீர் விருந்தை அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்திருந்தார். புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

புதுச்சேரி
இருப்பினும், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தது. இதையடுத்து திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணித்தன. அதேநேரம் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

அரசியலாக்க வேண்டாம்
இந்நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறுகையில், "ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், திமுக கட்சிகள் அரசியலாக்க வேண்டாம். இது தமிழ்ப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல. அனைத்திலும் அரசியல் புகுத்தினால், யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications