புதுவையில் சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு... எதற்கெல்லாம் தடை? ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதிரடி
புதுவை: கொரோனா பாதிப்பு புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை வார இறுதி நாட்களில் முழுவ ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக துணை நிலை ஆளுநர்
தமிழிசை செளந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தைப் போலவே புதுவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த புதுவை அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில் புதுவையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து உயர்நிலைக் கூட்டம் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன
தமிழகத்தில் அமலுக்கு வந்தது இரவு ஊரடங்கு... சாலைகள் வெறிச்சோடின.. கட்டுப்பாடுகள் என்னென்ன?
வார இறுதி நாட்களில் ஊரடங்கு
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதுச்சேரி முழுவதும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மற்ற நாட்களில் கடைகள் பகல் 2.00 மணி மட்டுமே இயங்க வேண்டும். அத்தியாவசிய கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். பகல் 2.00 மணிக்குப் பிறகு, உணவு விடுதிகளில் பார்செல்கள்மட்டும் அனுமதிக்கப்படும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆட்கள் அனுமதிக்கப்படுவர்.
மருந்துகள் கொள்முதல்
எதிர்வரும் கொரோனா சுழலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் படுக்கைகளை அதிகப்படுத்துவது, தேவையான இடங்களை கொரோனா பாதுகாப்பு மையங்களாக மாற்றுவது, போதிய அளவு மருந்துகளைக் கையிருப்பில் வைப்பது, கூடுதலாக உயிர் காக்கும் மருந்துகள் கொள்முதல் செய்வது உள்ளிட்டவற்றை விரைவாக மேற்கொள்ள வேண்டும். அதேபோல தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது 18 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் தேவையான அளவு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்தல் செய்ய வேண்டும். RT PCR கொரோனா பரிசோதனைகளையும் அதிகப்படுத்த வேண்டும்.
ஆக்சிஜன் சிலிண்டர்கள்
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொழிற்சாலைகள் ஆக்சிஜனை வழங்குவதை ஒழுங்குபடுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவப் பணிகளுக்காகத் தேவையான அளவு ஆட்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும்,கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
புதிய கட்டுப்பாடுகள்
அறிகுறிகள் காணப்படும் நபர்களை பரிசோதனை செய்த பின்னர், மருத்துவமனை அல்லது கொரோனா பாதுகாப்பு மையங்களில் சேர்க்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் ஊர்வலங்கள் தேரோட்டங்கள் முதலியவை தடை செய்யப்படுகிறது. கொரோனா வழிமுறைகளோடு மத வழிபாடுகள் அனுமதிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி நாளை முதல் வழங்கப்படும்" என்று புதுவை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.