‛‛ஸ்டாலின்’’ சொல்வது தான் சரி.. வெளிப்படையாக ஆதரித்த ப சிதம்பரம்.. திரும்பும் பாஜக.. என்ன மேட்டர்?
புதுக்கோட்டை: மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில் அதனை முழுவதுமாக ஆதரிப்பதாக ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதில் உறுதியாக இருக்கிறது. அதோடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை தேர்தல் வாக்குறுதியாகவும் காங்கிரஸ் அறிவிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் இன்று புதுக்கோட்டை மாவட்டம்கொத்தமங்கலம் ஊராட்சியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டடங்கள் கட்டும் பணிக்கு ப சிதம்பரம் அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் சாதிவாரி கணக்கெடுப்பை இணைத்து நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ப சிதம்பரம் கூறியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தேவை. அரசு வேலை, பள்ளிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். இத்தகைய ஒதுக்கீடு வழங்கும்போது புள்ளிவிபரங்கள் கட்டாயம் தேவை. அந்த விபரங்கள் இன்றி எப்படி ஒதுக்கீடு வழங்குவது?. கணக்கெடுப்பின் மூலம்தான், ஒடுக்கப்பட்ட மக்கள், வறுமை நிலையில் உள்ளவர்களின் நிலை தெரியவரும்.
வனத்தில் வாழும் புலி, யானையை கணக்கிடுகிறோம் என நண்பர் ஒருவர் நாடாளுமன்றத்தில் வேடிக்கையாகக் கூறினார். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இந்த அரசு எடுக்கவில்லை. 2021ல் எடுக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை 2023 முடியும் நிலையிலும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் அந்த கணக்கெடுப்பை எடுக்கும்போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்'' என்றார்.
இதையடுத்து திமுகவின் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‛‛நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் என் கருத்து. மற்ற மாநிலங்களுக்கு தேவை என்று நினைத்தார்கள் என்றால், வைத்துக்கொள்ளட்டும். தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் ஆரம்பகாலத்தில் இருந்தே திமுகவின் கோரிக்கை. அதை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. நீட் இன்றி தமிழகத்தில் இருந்து பல புகழ்பெற்ற மருத்துவர்கள் வந்துள்ளனர்'' என்றார்.












Click it and Unblock the Notifications