'என் வேலை அது இல்லையே'.. புதுக்கோட்டையில் கார் நின்ற இடத்தை விட்டுவிட்டு சாலை போட்ட ஒப்பந்ததாரர்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கார் நின்றதால் அந்த இடத்தை மட்டும் அப்படியே விட்டு பிற இடங்களில் ஒப்பந்ததாரர் சாலை அமைத்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சாலையை முறையாக போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீப காலமாக சாலை அமைப்பது, மழை வடிகால் கட்டும் பணிகளில் ஈடுபடுவது போன்ற பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் சிலர் முறையாக பணிகளை மேற்கொள்வது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுவது வாடிக்கையாகி வருகிறது. சாலைகளை அமைக்கும் போது சாலை ஓரத்தில் அடி பம்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் அதை அகற்றாமல் சாலை அமைப்பது.. தரமில்லாத சாலைகள் போடுவது என தொடர்ந்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகளின் போது சாலை ஓரத்தில் கிடந்த அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் தடுப்புச்சுவர் போடப்பட்டது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனடியாக அதனை சீரமைக்க வேலூர் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.
இதன் பின்னர் ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது. அரசு உரிய நடவடிக்கை மற்றும் எச்சரிக்கை விடுக்கும் நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், இதற்கெல்லாம் ஒரு படி மெலே போய் புதுக்கோட்டையில் சாலை அமைக்கும் போது கார் நின்ற இடத்தை அப்படியே விட்டு சாலை போடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது. இது குறித்த விவரம் வருமாறு:-
புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பல இடங்களில் சாலைகள் அமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பல ஆண்டுகளாக போடப்படாமல் இருந்த சாந்தரம்மன் கோவில் சன்னதி சாலை போடும் பணி நடைபெற்றது. நகராட்சியின் சார்பில் நேற்று முன் தினம் இரவு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இரவே சாலை அமைக்கும் பணிகள் முடிந்ததாக சொல்லப்படுகிறது. காலையில் அப்பகுதி மக்கள் சாலையை வந்து பார்த்த போது சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு பிற இடங்களில் சாலை போட்டு முடித்துள்ளனர். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் , புதுக்கோட்டை மியூசியம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்ற போது அப்பகுதியில் அடி பம்புடன் சேர்த்து ஹாலோ ப்ளாக் கற்கள் பதிக்கப்பட்டது விமர்சனத்திற்கு உள்ளளாகியிருந்தது. ஹாலோ பிளாக் கற்கள் பதிக்கப்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் எடுக்க முடியாத சூழல் உருவானது.
இது விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த நிலையில், மீண்டும் புதுக்கோட்டையில் அலட்சியமாக சாலை போடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கும் பொழுது முறையாக அமைக்கப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது புதுக்கோட்டையில் புதிய சாலை போடும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை கூட அங்கிருந்து எடுக்க முயற்சி செய்யாமல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தை விட்டுவிட்டு பிற இடங்களில் புதிய சாலை அமைத்துள்ளது பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications