மோடியோ அமித்ஷாவோ சொன்னால் போதும்.. அதிமுகவுக்குள் சசிகலா வந்துவிடுவார்.. காங்கிரஸ் எம்பி விமர்சனம்
புதுக்கோட்டை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சசிகலாவை கட்சியில் சேர்க்குமாறு பிரதமர் மோடியோ அமித்ஷாவோ கூறினால் நிச்சயம் சேர்த்துக் கொள்வார்கள் என திருச்சி எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள எம்பி திருநாவுக்கரசர் வருகை தந்தார். அவர் நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வழங்கப்படவில்லை, அது போல் போதிய அளவு நிலக்கரி ஸ்டாக் இல்லை. இதுவே மின்தட்டுப்பாட்டிற்கும் மின் தடைக்கும் காரணமாக அமைந்துவிட்டது. ராஜ்யசபா எம்பியாக வேண்டும் என்பதற்காகவே கபில் சிபல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

தனிப்பட்ட விருப்பம்
இதெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அதே வேளையில் அவர்கள் வெளியேறுவதால் காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துவிடாது. ஏனென்றால் இக்கட்சி 130 ஆண்டுகால வரலாறு கொண்டது. காங்கிரஸ் என்பது வற்றாத ஜீவநதி போன்றதாகும். யார் விலகினாலும் காங்கிரஸுக்கு எந்த பாதிப்பும் வராது. பிரசாந்த் கிஷோரின் அரசியல் வியூகங்கள் சில மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மாநிலங்களில் தோல்வி
ஆனால் சில மாநிலங்களில் தோல்வியடைந்துள்ளது. என்னை பொருத்த வரை பிரசாந்த் கிஷோர் காங்கிரஸுக்கு வராததுதான் அவருக்கு நல்லது, காங்கிரஸ் கட்சிக்கும் நல்லதாகும். கட்சியின் எதிர்கால நடவடிக்கை அனைத்தும் ராகுல் காந்தி கையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வரும் பணிகளை அவர் செய்வார்.

காங்கிரஸ் கட்சி
அது போல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவதால் கட்சியின் எதிர்காலத்தை அது எந்தவிதத்திலும் பாதிக்காது. இதெல்லாம் பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. கருத்து வேறுபாடுகள் எல்லாம் கூட்டணிக்குள் சகஜம்தானே.

அதிமுக செயல்படவில்லை
சசிகலா எதிர்பார்த்தது போல் அதிமுக செயல்படவில்லை என தனது பேட்டியில் அவரே கூறியுள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதும் ஒன்றுதான், சேர்க்காமல் இருப்பதும் ஒன்றுதான். சசிகலா கட்சியில் சேர்ந்தால் அதிமுக வளர்ச்சி பெறுமா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் சசிகலாவை ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் அதிமுகவில் சேர்ப்பதாக தெரியவில்லை.

அதிமுகவில் சசிகலா எப்போது
சசிகலா தான் சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஒரு வேளை பிரதமர் மோடியோ அல்லது மத்திய அமைச்சர் அமித்ஷாவோ சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என ஓபிஎஸ். ஈபிஎஸ்ஸிடம் தெரிவித்தால், அவர்கள் இருவரும் பயந்து கொண்டு சசிகலாவை சேர்த்தாலும் சேர்த்துக் கொள்வார்கள். அதிமுகவில் இரட்டை தலைமையை கொண்டு வந்தது டெல்லி தலைமைதான் என்றார்.












Click it and Unblock the Notifications