சரிந்த குடல்.. பிரிந்த 21 வயது இளைஞர் உயிர்! புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் முட்டிவீசிய காளையால் துயரம்
புதுக்கோட்டை: கீரனூர் அருகே சீமானூர் பூமாலை அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி 21 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்ந்து உள்ளது.
புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகை மட்டுமின்றி கோயில் திருவிழாக்களின்போது பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பல்வேறு கோயில் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் கோலாகளமாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த சீமானூர் பூமாலை அய்யனார் கோயிலில் சித்திரை திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். 800 காளைகள், 300 காளையர்கள் கலந்துகொண்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள்.
இதில் வெற்றிபெற்ற காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களுக்கு, தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், பீரோ, கட்டில், சைக்கிள் என பல்வேறு வகையான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இந்த நிலையில் போட்டியின்போது வாடிவாசலில் இருந்து வந்த காளை ஒன்று, மைதானத்திற்குள் மாடு பிடிப்பதற்காக நின்றுகொண்டு இருந்த வீரரை கொம்பால் குத்தி தூக்கி வீசியது.
இதில் படுகாயமடைந்த அந்த வீரர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், அதிக ரத்தம் வெளியேறியதால் அவரது உயிர் பிரிந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த வீரரின் பெயர் ஜெயந்த் என்பதும் அவருக்கு 21 வயதே ஆவதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications