ராமநாதபுரத்தில் 2 மாதத்தில் 3 விஏஓக்கள் கைது.. கையெழுத்து கேட்டு வருவோரால் மாறும் தலையெழுத்து!
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே விதவை உதவித்தொகை மனு மீது நடவடிக்கை எடுப்பதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கையும் களவுமாக சிக்கி உள்ளார். அவர் மீது புதிய குற்றவியல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்தில் லஞ்சம் வாங்கியதாக 3 விஏஓக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலர் பணி என்பது மிகவும் முக்கியமானது.. பிறப்பு, இறப்புகளை பதிவு செய்து , சான்று வழங்குவது, அது தொடர்பான பதிவேடுகளைப் பராமரிப்பது, அரசுக் கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாப்பது, முதியோர் ஓய்வூதியம் வழங்குவது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது, முதியோர் ஓய்வூதிய பதிவேட்டைப் பராமரிப்பது, பொதுச் சொத்துக்கள் பற்றிய பதிவேட்டைப் பராமரிப்பது, நிலப் பதிவேடுகளை கணினி மயமாக்குதலுக்கான பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது, நில வரி , கடன்கள் , அபிவிருத்தி வரி, மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூல் செய்வது, கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல் உள்பட பல்வேறு பணிகளை செய்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஐஏஎஸ் படித்த மாவட்ட கலெக்டர் ஒரு மாவட்டத்திற்கே செய்யும் பணியை அந்த கிராமத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி தான் செய்கிறார். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சில அரசு சான்றிதழ்கள் வாங்க லஞ்சம் கேட்பதாக புகார்கள் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது. பிறப்பு சான்றிதழ், ஜாமீன் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம், விதவையர் சான்றிதழ், நிலவரி, பத்திரப்பதிவு உள்பட விஷயங்களில் கிராம நிர்வாக அலுவலர்களின் பணி முக்கியமானது. இந்த சூழலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த 2 மாதத்தில் லஞ்சம் வாங்கியதாக 3 விஏஒக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடைசியாக நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சிறுமணியேந்தல் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த 62 வயதாகும் பாண்டித்துரை தனது மகளுக்கு அரசு வழங்கும் ஆதரவற்ற விதவைக்கான உதவிதொகை பெற விண்ணப்பித்து உள்ளார். மேலும் இது சம்பந்தமாக நல்லூர் குரூப் கிராம நிர்வாக அதிகாரி பூமிச்சந்திரனை (47) சந்தித்து விவரம் கேட்டாராம்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க தனக்கும் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறி ரூ.6 ஆயிரம் கேட்டாராம். என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என பாண்டித்துரை தெரிவித்தாராம். இதனால் ரூ.5 ஆயிரமாவது கொடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அதிகாரி பூமிச்சந்திரன் கூறினாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாண்டித்துரை, இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 173-ன்படி வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை பாண்டித்துரையிடம் கொடுத்தார்கள்.
பாண்டித்துரை அந்த பணத்தை கிராம நிர்வாக அதிகாரியின் புரோக்கராக கூறப்படும் கற்பகவள்ளி என்பவர் மூலம் கொடுத்துள்ளார். பணத்தை கற்பகவள்ளியிடம் இருந்து பூமிச்சந்திரன் பெற்றுக்கொண்டபோது அப்பகுதியில் மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கையும்,களவுமாக அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் கற்பகவள்ளியிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications