பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி உத்தரவு
ராமநாதபுரம்: பரமக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிறப்பு புலன்விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளிட்டுள்ள அறிக்கையில், "இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுக்கா புத்துநகரில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை சிலர் கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 5/2023 பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய 5 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன்விசாரணை செய்யும் பொருட்டு, முனைவர் C. சைலேந்திர பாபு, இ.கா.ப., தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு (CB CID) மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
பரமக்குடி தனியார் பள்ளி ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவ்வழக்கில் நகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர் சிகாமணி 44, புதுமலர் பிரபாகரன் 42, ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது 36, உடந்தையாக இருந்த கயல்விழி 45, அன்னலட்சுமி 34, ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஆயிர வைசிய சபையின் சார்பில் பரமக்குடியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது பரமக்குடி நகரில் உள்ள அனைத்து வியாபாரிகளும் ஊழியர்களும் பொதுமக்களைத் திரட்டி மகாத்மா காந்தியின் சிலை முன்பு கண்டன உரை நிகழ்த்தி தமிழக அரசின் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் தான் சிபிசிஐடி விசாரணைக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications