ராமநாதபுரம் தோழி வீட்டில் அவ்வளவும் தங்கம்.. ஜாக்கெட் போட போன கல்லூரி மாணவி... நடந்த ட்விஸ்ட்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் தோழி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற கல்லூரி மாணவி ரூ.10 லட்சம் நகைகளை திருடியதாக சிக்கி உள்ளார்.. ஜாக்கெட் போட்டு பார்த்துக் கொண்டே, பீரோவில் நகையை திருடிய மாணவி சிக்கியது எப்படி என்பதை பார்ப்போம்.
ராமநாதபுரம் அருகே கழுகூரணியைச் சேர்ந்த பைரஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிர்தவுஸ் பானு. இவருக்கு 43 வயது அகிறது.. பிர்தவுஸ் பானு வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில் தையல் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது வீட்டு பீரோ லாக்கரில் வைத்திருந்த தனது தங்க வளையல்கள், நெக்லஸ், தங்க செயின், கைச்செயின், மோதிரம் என சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 19 பவுன் தங்க நகைகள் திடீரென்று மாயமானதை கண்டு பிர்தவுஸ் பானு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் மேற்கண்ட பிர்தவுஸ் பானுவின் மகளுடன் கல்லூரியில் படிக்கும் கீழக்கரையைச் சேர்ந்த முகமது காமின் என்பவரின் மனைவி அபிராஅல் (21) என்பவர் மேற்கண்ட நகையை திருடியது தெரியவந்தது.
திருமணம் முடிந்து குழந்தை பிறந்த நிலையில் அபிராஅல் கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கினார்.. அப்போது பிர்தவுஸ் பானுவின் மகளுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தோழியை பார்க்க அவரின் வீட்டிற்கு அடிக்கடி அபிராஅல் சென்று வந்துள்ளார். அப்போது பிர்தவுஸ் பானு வீட்டில் நகைகளை பீரோவில் வைப்பதை அபிராஅல் பார்த்துள்ளார். எனவே திட்டம் போட்டு ஜாக்கெட் தைக்கக் கொடுப்பதுபோல் கொடுத்து அதனை போட்டுப் பார்ப்பதாக கூறி வீட்டிற்குள் நகை இருக்கும் அறைக்கு சென்றிருக்கிறார். அங்கு ஜாக்கெட் போட்டு பார்த்துக் கொண்டே நகையை திருடியிருக்கிறார்.
இதையடுத்து அபிராஅல்லை பிடித்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். விசாரணையில் தான் திருடியதை அபிராஅல் ஒப்புக்கொண்டுள்ளார். மேற்கண்ட நகைகளை திருடி ராமநாதபுரத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரூ.7 லட்சத்திற்கு விற்று பணத்தை செலவு செய்து வந்ததாகவும் கூறினார். இதையடுத்து நகைகளை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications