ஆரத்தி எடுத்த பெண்களுக்கு 500 ரூபாய் கட்டை உருவி பணம் கொடுத்த ஓபிஎஸ்! விசாரணையில் தேர்தல் ஆணையம்!
ராமநாதபுரம்: ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு, ஓ.பன்னீர்செல்வம் 500 ரூபாய் நோட்டுக்கட்டை பிரித்து பணம் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவை மீட்பதற்காக தனது தொண்டர்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஒரே ஒரு தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த சின்னம் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சையாக போட்டியிடும் நிலையில், அவரைப் போன்றே பன்னீர்செல்வம் என்ற பெயருடன் பலர் வேட்பாளர்களாக உள்ளனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரிலேயே மேலும் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து, அவர்களது மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் சிதறும் எனக் கூறப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் பல அப்பாவிகளை கொண்டு வந்து வேட்பாளர்களாக நிறுத்தி எடப்பாடி பழனிசாமி சதி செய்துள்ளதாகவும், எத்தனை பேர் ஓபிஎஸ் பெயரில் பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை என்றும் வெற்றி எங்களுக்குத்தான் என்றும் கூறி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.
இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி பகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது ஓபிஎஸ்ஸுக்கு பெண்கள் சிலர் ஆரத்தி எடுத்தனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தனது சட்டைப் பையில் இருந்து 500 ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்றை எடுத்து, அதில் சில நோட்டுகளை எடுத்து அருகில் நின்ற பெண்ணிடம் கொடுத்தார்.
மேலும், பணம் கொடுத்ததோடு சண்டை போட்டுக் கொள்ளாமல் பகிர்ந்து கொள்ளுங்கள் என்றும் கூறினார் ஓபிஎஸ். இதனால், அங்கிருந்த பெண்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. இதுஒருபுறம் இருக்க, ஓபிஎஸ் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்தது தேர்தல் நடத்தை விதி மீறல் என புகார் எழுந்துள்ளது.
வாக்காளர்களுக்கு, தேர்தல் நேரத்தில் பணம், பரிசு பொருட்கள் கொடுப்பது சட்டவிரோதம். தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம் கொடுத்ததற்காக வேட்பாளர் தகுதி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும்போது 3 முறை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ், தான் வேட்பாளராக இருக்கும்போதே வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓபிஎஸ்ஸை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, ஓபிஎஸ் பணம் வழங்கியது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ராமநாதபுரம் தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications