Rajinikanth ரஜினிகாந்துக்கு ஆளுநர் பதவியா? பாஜக அண்ணாமலையை ஆஹா ஓஹோனு புகழ்ந்தது யாருனு பாருங்க
ராமநாதபுரம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலில் வெற்றிபெறுவது கடினம் என்றும், அதேசமயம் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெற்றிபெறுவது எளிது என்றும் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார். சத்யநாராயணராவின் இந்தக் கருத்து தமிழக வெற்றிக் கழகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து அவர் பேசியதைவிட, அவருடைய மூத்த சகோதரர் சத்யநாராயணராவ் பேசிய கருத்துகளே அதிகம் பேசப்பட்டன. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்த பின்னர்தான், அண்ணனின் அரசியல் சார்ந்த பேச்சுகள் ஓய்ந்திருந்தன.

இந்தச் சூழலில், தற்போது மற்ற அரசியல் கட்சிகள் குறித்துக் கருத்து தெரிவித்து வருகிறார் சத்யநாராயணராவ். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு வந்திருந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
ரஜினியின் அரசியல் ஆர்வம்
அப்போது அவர், "ரஜினிகாந்துக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. அவருக்கு ஆளுநர் பதவி தேடி வந்தது, ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். மாநிலங்களவைக்கு கமல்ஹாசன் தேர்வானது மகிழ்ச்சியாக உள்ளது. வரும் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி வெற்றிபெறுவது கஷ்டம்" என்றார்.
அண்ணாமலை புத்திசாலி
மேலும், "ஆனால், அண்ணாமலை அரசியலில் வெல்வார். அவர் நல்ல புத்திசாலி. அவர் கர்நாடகாவில் காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றியபோது நேர்மையாகச் செயல்பட்டார். அண்ணாமலை அடிப்படையில் நல்ல மனிதர். அவர் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும்" என்றும் சத்யநாராயணராவ் தெரிவித்தார்.
2017 இல் நடந்தது என்ன?
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, அவருடைய உடல்நிலை ஒத்துழைக்காததாலும், மருத்துவர்கள் அறிவுறுத்தியதாலும் அரசியல் பிரவேசத்தை அவர் கைவிட்டார்.
ரஜினி பேச்சு
சமீபகாலமாக, சர்ச்சையை ஏற்படுத்தாத வகையில் அரசியல் சார்ந்த கருத்துகளை ரஜினிகாந்த் கூறி வருகிறார். உதாரணமாக, 'வேள்பாரி' புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை விற்றது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவுக்கு ரஜினிகாந்த் அழைக்கப்பட்டிருந்தார்.
வேள்பாரி புத்தக விழா
"புத்தகம் குறித்து ரஜினிக்கு என்ன தெரியும், அவரை விட்டால் வேறு ஆளே இல்லையா?" என்றெல்லாம் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த விமர்சனங்களை அப்படியே 'வேள்பாரி' மேடையில் ரஜினி குறிப்பிட்டார். "புத்தகங்களைப் படித்த மேதாவி சிவக்குமார் உள்ளிட்டோர் இருக்கும்போது ஏன் என்னை அழைத்தீர்கள்?" என்று கேட்டு, தன்னை இந்த விழாவுக்கு அழைத்தது பொருத்தமானதுதான் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ளும் விதமாகப் பல்வேறு புத்தகங்கள் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
ஆச்சரியம்
கன்னடரான ரஜினிகாந்த் இத்தனை இலக்கியங்களைப் படித்துள்ளாரா எனப் பலரும் ஆச்சரியப்பட்டனர். அதுபோல், தி.மு.க. மேடைகளில் ரஜினிகாந்த், அக்கட்சித் தலைவர்களையே கலகலப்பாக விமர்சித்திருந்தார். அவர் மேடை ஏறினாலே சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், அவருடைய சகோதரர் சத்யநாராயணராவ், தமிழக அரசியல் குறித்து பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியின் அடுத்த படங்கள்
ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஒரு பாடலை டி. ராஜேந்தர் பாடியுள்ளார். அதுபோல், 'ஜெயிலர் 2' படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications