விஏஓ டூ வருவாய் ஆய்வாளர்.. ஒரே ஒரு கையெழுத்துக்காக அரசு ஊழியரின் தலையெழுத்தே மாறிடுச்சு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பசியாபுரம் கிராமத்தை சேர்ந்த வசந்த் என்பவரிடம் வாரிசு சான்றிதழுக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கொந்தகை வருவாய் ஆய்வாளர் முத்து முருகன் கையும் களவுமாக சிக்கியுள்ளார். டிஎஸ்பி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்துள்ளனர்.
புதிய பட்டா வாங்குவதற்கு, பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு, வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு, பத்திரப்பதிவு செய்வதற்கு, நிலத்தை அளப்பதற்கு, ஜாமீன் சான்றிதழ் வாங்குவதற்கு, சாதி சான்றிதழ், ரேஷன் கார்டு விண்ணப்பம், சொத்து பாகப்பிரிவினை, லே அவுட் அமைப்பது என பல்வேறு விஷயங்களில் சில அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவது நடக்கிறது. அப்படி வாங்கும் அரசு ஊழியர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறிவைத்து பிடித்து கைது செய்து வருகிறார்கள்.

ஒரு முறை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் அரசு ஊழியர் சிக்கினால், சஸ்பெண்ட் செய்யப்படுவார், சஸ்பெண்ட் செய்யப்படும் அரசு ஊழியர் மீண்டும் பணியில் சேர்ந்தாலும், அரசு ஊழியர்கள் சட்ட ரீதியாக கேஸை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அப்படி சட்ட ரீதியாக கேஸை சந்திக்கும் அரசு ஊழியர்கள், குற்றம் நிரூபிக்கப்படும் போது, தண்டனைக்கு உள்ளாவார்கள். இவ்வளவு சிக்கல் இருந்தும் சிலர் தைரியமாக லஞ்சம் வாங்குகிறார்கள். அப்படி லஞ்சம் வாங்கியவர் கைதாகி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த பசியாபுரம் கிராமத்தை சேர்ந்த 35 வயதாகும் வசந்த் , இவர் வாரிசு சான்றிதழ் கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ந்தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதற்கு பசியாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அனுமதி அளித்தார். பின்னர் சிவகங்கை மாவட்டம் கொந்தகை வருவாய் ஆய்வாளர் முத்து முருகனின் (33) அனுமதிக்கு விஏஓ அனுப்பினார். ஆனால் அவர் அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம்.

இதைதொடர்ந்து கொந்தகை வருவாய் ஆய்வாளர் முத்துமுருகனை சந்தித்து விரைவாக அனுமதி தரும்படி வசந்த் கேட்டிருக்கிறார். அதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் தந்தால்தான் அனுமதி அளிப்பேன் என்று வருவாய் ஆய்வாளர் முத்துமுருகன் கூறினாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்த், இதுகுறித்து சிவகங்கையில் லஞ்ச ஒழிப்பு போலீசில் சென்று புகார் செய்தார்.
சிவகங்கை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை கொந்தகையில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்று முத்துமுருகனிடம் வசந்த் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு ேபாலீசார், வருவாய் ஆய்வாளர் முத்துமுருகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். அரசு ஊழியர்கள் அண்மைக்காலங்களில் அதிக அளவில் லஞ்சம் வாங்கி கைதாகும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications