இளையான்குடி பஸ் ஸ்டாப் மாற்றம்.. தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மக்கள் நலக் கூட்டமைப்பினர் கைது
சிவகங்கை: இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைப்பதை எதிர்த்து இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஏற்கனவே ஊருக்குள் இருக்கும் பேருந்து நிலையத்தை எடுத்துவிட்டு ஊருக்கு வெளியே 4கிமீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கனவே இருக்கும் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து மக்கள் நலக் கூட்டமைப்பு என்கிற அமைப்பையும் உருவாக்கியுள்ளனர்.
அதன்படி இந்த அமைப்பு சார்பில், சாலை மறியல், கடையடைப்பு போராட்டம், முதல்வருக்கு ஐந்தாயிரம் தபால்கள் அனுப்பும் போரட்டம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். மக்களின் தொடர் எதிர்ப்பால் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அமைச்சா் கே.என்.நேரு போராட்டக் குழுவினரிடம் தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து அப்பகுதி மக்களும் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் மீண்டும் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றதையடுத்து இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர்.
அதன்படியே இன்று காலை 11 மணியளவில் மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் ராயபுரத்தில் உள்ள மண்டபத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
தங்கள் பகுதியில் ஊருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்கும் வேலையை கைவிட்டு ஏற்கனவே இருக்கும் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி கொடுக்கும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
Sivagangai: Makkal Nala Koottamaippu protested against Ilaiyankudi bus stop change. இளையான்குடியில் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைப்பதை எதிர்த்து இன்று தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.












Click it and Unblock the Notifications