இரவில் ப சிதம்பரத்தை பேசவிடாமல் தடுத்த பெண், மறுநாள் காலை அதிமுக வேட்பாளருக்கு தந்த இன்ப அதிர்ச்சி
சிவகங்கை: முதல் நாள் இரவில் வாக்கு கேட்டு வந்தால் கல்லால் அடிப்போம் என்று ப சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த காரைக்குடி பெண், அடுத்த நாள் காலையில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ்க்கு ஆரத்தி எடுத்து வரவேற்றதால் பரபரப்பு எழுந்துள்ளது.
சிவகங்கை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் கடந்த 2014ல் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கி உள்ளார். கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக அவரது அப்பாவும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சிவகங்கை லோக்சபா தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள மித்ராவயல் கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு, ப.சிதம்பரம் , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக கார்த்தி சிதம்பரம் மித்ராவயல் கிராமத்து பக்கமே வரவில்லையே" என் ஆவேசப்பட்ட பெண் ஒருவர், "ப.சிதம்பரம் பேசவேக் கூடாது" என கூறி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மித்ராவயல் கிராமத்துக்கு கார்த்தி சிதம்பரம் எதுவும் செய்யவில்லை என்றும் அந்த பெண் குற்றம்சாட்டினார்.
இதற்கு திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி பதிலளித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "நான் இங்கு வந்து பேசுவதற்கு உரிமை உள்ளது. அதேபோல் நீங்கள் பேசுவதற்கும் உரிமை உள்ளது. முதலில் நான் பேசி விடுகிறேன். பின்னர் நீங்கள் பேசுங்கள், கையெடுத்து கேட்கிறேன் அமைதியாக இருங்கள்" என்று எடுத்துக்கூறினார்.
இருப்பினும் தொடர்ந்து அந்த பெண் ஆத்திரத்துடன் பேசிக்கொண்டே இருந்ததால், "அடுத்த தேர்தலில் இந்த அம்மாவுக்கு ஏதாவது ஒரு கட்சியில் சீட் கொடுத்து நிற்க வைங்க" என ப.சிதம்பரம் பேசினார். அப்போது அந்த பெண், அந்தக் கிராமத்தில் மதுகுடித்துவிட்டு 3 பேர் இறந்து போனார்கள்.
"3 பேர் இறந்த சமயத்தில் எம்பி உள்ளிட்ட யாருமே வந்து எட்டிப்பார்க்கவில்லை. அதனால் யாரும் இங்கே ஓட்டு கேட்டு வரக்கூடாது. வந்தால் கல்லால் அடித்து விரட்டுவோம் என்றார். அப்போது பெண்கள் சிலர் மதுக் கடையை மூட வேண்டுமென வாக்குவாதம் செய்தனர். அப்போது அந்த பெண், எங்கள் பகுதியில் மதுக்கடை இருப்பதால், யாரும் என் மகனுக்கு பெண் தர மறுக்கின்றனர் என்றும் ப சிதம்பரத்துடன் வாக்குவாதம் செய்தார். இதனால் பிரச்சாரம் நடந்த இடத்தில் சர்ச்சை ஏற்பட்டது.
இதனிடையே நேற்று காலை அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் மித்ராவயல் கிராமத்திற்கு சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது, ப.சிதம்பரத்திடம் வாக்குவாதம் செய்த அந்தப் பெண், சேவியர்தாஸுக்கு ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றார். அப்போது அந்தப் பெண், காங்கிரஸ் பிரச்சாரத்தின்போது கடுமையாக எதிர்த்துப் பேசியதை வேட்பாளரிடம் தெரிவித்தார். இது பிரச்சாரத்தில் சர்ச்சையாக மாறியது. பிடிக்காத கட்சியினர் வந்தால் அவர்களை பிரச்சாரம் செய்யவிடாமல் தடுப்பது, அவர்களுக்கு எதிராக கடுமையாக பேசுவது, பிடித்த வேட்பாளர் வந்தால் ஆரத்தி எடுத்து வரவேற்பது என்பது தமிழக தேர்தல்களில் சகஜமான ஒன்றாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications