காதலை கண்டித்த கல்லூரி நிர்வாகம்.. விபரீத முடிவை எடுத்த பிசிஏ மாணவி.. சிவகாசி அருகே சோகம்!
விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவியின் காதல் விவகாரம் குறித்து கல்லூரி நிர்வாகம் கண்டித்ததால் மாணவி இந்த சோக முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. கல்லூரி மாணவர்களும் மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கலைக் கல்லூரியில் பிசிஏ 2 ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி சோலை ராணி (வயது 19). சிவகாசி அருகே உள்ள ஆசாரி காலனி பகுதியில் தந்தை இல்லாததால் தாயுடன் வசித்து வந்தார் சோலை ராணி. இவரது தாய் அருகில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.

தூக்கிட்டு தற்கொலை செய்த கல்லூரி மாணவி
சம்பவத்தன்று இரவு தாய் மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மாணவி சோலை ராணி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர். மாணவி தூக்குப்போடு தற்கொலை செய்துகொள்வதற்கு பின்னால் காதல் விவகாரம் இருக்கிறது என்றும், இந்த காதல் விவகாரம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிந்ததால் அவர்கள் மாணவியை கண்டித்ததால் இந்த விபரீத முடிவினை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
கல்லூரியில் படித்து வந்த சோலை ராணி, அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் சென்று வந்தனர் என்றும், ஒரு நாள் கல்லூரிக்கு வெளியே காதலருடன் இருக்கும் புகைப்படத்தை மாணவி ஸ்டேட்டஸ் வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஸ்டேட்டஸ் புகைப்படத்தை கல்லூரியில் இருக்கும் பியூன் ஒருவர் முதல்வருக்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
கண்டித்த கல்லூரி முதல்வர்?
இதைப் பார்த்த கல்லூரி முதல்வர் மாணவியை அழைத்து கண்டித்ததாகவும், மாணவியின் தாயிடம் நடந்த சம்பவம் பற்றி கூறி இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்றும், இதை எழுதி கொடுத்து விட்டு செல் என்று கூறி மாணவியிடம் கடிதம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவி சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் வீட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குபதிவு செய்த சிவகாசி டவுன் போலீசார், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியதில், "மாணவி காதலித்ததை அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தினோம்.. சமூக வலைத்தளத்தில் மாணவி வைத்திருந்த ஸ்டேட்டஸ் குறித்து கூறினோம். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என எழுதி வாங்கிவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டோம். ஆனால் மாணவி இவ்வளவு பெரிய முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை.
உண்மை கிடையாது
மாணவியை நாங்கள் வெளியே நிற்க வைத்து அவமானப்படுத்தியதாக கூறப்படுவது உண்மை கிடையாது" என்று கூறியுள்ளனர். அதே சமயம் மாணவியின் தனிப்பட்ட விஷயத்தில் கல்லூரி நிர்வாகம் இவ்வளவு கடுமை காட்டியிருக்க கூடாது என்றும், இலகு மனம் கொண்ட பெண்கள் உளவியல் ரீதியாக இதுபோன்ற சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்று இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மாணவி தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகத்தின் தவறே காரணம் என்றும், அந்த மாணவி கல்லூரியை விட்டு செல்லும் போது கூட நான் சாகப்போகிறேன் என்று சொல்லிவிட்டே சென்றார் என்றும் மாணவர் சங்கம் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது தொடர்பாக மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.











Click it and Unblock the Notifications