கோலி, தோனி, சச்சினை விட பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர்.. தனி விமானத்தில் ராஜ வாழ்க்கை! யாரது?
சென்னை: தற்போது கோடிகளில் புரளும் விராட் கோலி, தோனி, சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்களை விட அந்த காலத்திலேயே செல்வ செழிப்புடன் வாழ்ந்த பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் இருந்தார். யார் அவர்? விரிவாக பார்ப்போம்.
தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள் என்றால் நாம் அனைவரும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம்.எஸ்.தோனி ஆகியோரின் பெயர்களை சொல்வோம். இவர்கள் ஒவ்வொருவரும் ரூ. 1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளன. கோடிக்கணக்கில் சம்பளம் மட்டுமின்றி விளம்பரங்கள், சமூக வலைதள பதிவுகள் என ஒவ்வொரு அசைவுக்கும் கோடிகள் கொட்டுகின்றன.

பல நூறு கோடி சொத்து மதிப்பில் வீடுகள், பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் என ஆடம்பரமான வாழ்க்கையை இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் விட ஒரு பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் இருந்தார். வாழ்ந்தால் இவரைபோல் வாழ வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு பணத்தில் புரண்ட அந்த கிரிக்கெட் வீரர் பெயர் பூபின்தர் சிங்.
இவர் தற்போது பணக்கார கிரிக்கெட் வீரர்கள் என்று அழைக்கப்படும் அனைவரையும் விட அதிக சொத்துக்களை கொண்டவராக இருந்தார். சொல்லப்போனால் சச்சின், தோனி, கோலியை ஆகிய மூன்று பேரின் சொத்துக்களை சேர்த்தாலும் இவரது சொத்து மதிப்புக்கு ஈடாகாது. பூபிந்தர் சிங் கிரிக்கெட் வீரராவதாற்கு முன் மகாராஜாவாக இருந்தவர். 1900-களில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பஞ்சாப் மன்னராக இருந்தார். நாட்டின் மிகப் பணக்கார குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர் இவர்.
மகாராஜாவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கிரிக்கெட் மீது கொண்ட அதீத ஆர்வத்தின் காரணமாக இந்தியாவின் ஆரம்பகால கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். மகாராஜா பூபின்தர் சிங் கிரிக்கெட்டுக்காகவே தன்னுடைய இளமை பருவத்தை செலவழித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார். இவரை பற்றி பலரும் அறியாத தகவல் என்னவென்றால், நூற்றாண்டுக்கு முன்பே இவர் எம்.எஸ்.தோனி மற்றும் விராட் கோலியையும் விட பணக்காரராக இருந்தார்.

பூபின்தர் சிங் தனது தந்தை இறந்த பிறகு ஒன்பது வயதிலேயே பஞ்சாப் மன்னராக முடிசூட்டப்பட்டார். அவர் வண்ணமயமான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்தார். ராஜ வாழ்க்கை என்பதை உண்மையாகவே அனுபவித்தவர் அவர். தனியார் விமானம் வைத்திருந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் அவர்தான். மேலும் தனது விமானத்தை இறக்குவதற்காகவும், நிறுத்துவதற்காகவும் தனது ராஜ்யத்தில் ஒரு விமான நிலையத்தையே கட்டினார்.
பூபிந்தர் சிங் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலும் அதிகளவில் விளையாடி உள்ளார், கடந்த 1911 ஆம் ஆண்டில், 20 வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் உயர்ந்தார். அந்த காலத்தில் விளம்பர படங்கள் போன்றவை இல்லாதபோதும், ராஜ குடும்பத்தில் பிறந்து ராஜாவாகவே வாழ்ந்த காரணத்தால் பூபின்தர் சிங் தனது செல்வத்தின் மூலமாக ஒரு பெரிய ராஜ்யத்தையே உருவாக்கினார்.
அந்த காலத்தில் மிகப்பெரிய ஆபரண நிறுவனமான கார்ட்டியருக்கு பூபிந்தர் சிங், நகை தயாரிக்க இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய ஆர்டரை கொடுத்தார். மிகவும் விலை உயர்ந்த பட்டியலா நெக்லஸ் அவரிடம் இருந்தது. அவரிடம் ரூ.22,000 கோடி மதிப்புள்ள ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த கற்கள் இருந்துள்ளன. அவரது சரியான சொத்து மதிப்பை தற்போதைய மதிப்பீட்டில் கணிக்க முடியவில்லை என்றாலும், ரூ.350 கோடி மதிப்புள்ள அரண்மனையில் அவர் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications