இலங்கை பயங்கரவாதிகள் பட்டியலில் 32 பேர் தமிழகத்தில் வாழும் அகதிகள்!: ஆலோசனையில் உள்துறை
இலங்கை தடை விதித்துள்ள நபர்கள் பற்றிய விவரங்கள், பின்புலத்தை ஆராயும் நடவடிக்கையில் மத்திய உளவுத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இடம்பெற்றுள்ள பெயர் பட்டியலை ஏற்றுக் கொள்வதாக இந்தியா அண்மையில் அறிவித்ததால், அவர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை அரசு, இந்திய வெளியுறவுத் துறை மூலம் மத்திய உள்துறைக்கு அனுப்பியிருக்கும் பட்டியலில் 32 அகதிகள் இடம்பெற்றுள்ளனர். இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந் நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த போரின்போது வெவ்வேறு காலகட்டங்களில் இவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள். இவர்களை "இந்தியாவில் வசிப்பவர்கள்' என்று அரசாணையில் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம்:
அப்பாதுரை அமலன், ராசதுரை சசீகரன், சிவஞானசுந்தரம் சிவகரன், யோகநாதன் திலீபன், சந்தியாபிள்ளை, சிவசேகரன் விஜயநீதன், குணசீலன் ரமணன், குணேந்திர ராஜா ஜெயராஜ், அம்பிகேதேசன் ஜனார்தனன், சந்திரபோஸ் ஜெயரூபன், போலிகாப் அலெக்சாண்டர், நவரத்னம் சதீஸ்வரன், சுப்பிரமணியம் சதீஸ்குமார், கமலதாஸ் கௌஷில்யா, ரூபசிங்கம் ஜனகாந்த், ரத்னசிங்கம் நித்தியானந்தம், பரமானந்தன் சிவராமகிருஷ்ணன், தம்பிதுரை சிவசிதம்பரநாதன், அமுதன், அந்திரஹென்னடிகே சமிந்தா தர்ஷனா, நவாஸ் (எ) சுரேஷ், ராஜேந்திரன் மூர்த்தி, சுதர்சன் கயிலநாதன், விக்னேஸ்வரன் பரமேஸ்வரி, விக்னேஸ்வரன் கந்தப்ப முத்தையா பிள்ளை.
முகவரியோடு பெயர்கள்
அதேசமயம், மேலும் ஆறு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் வசிப்பிட முகவரியையும் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.
இளங்குமரன் ரஞ்சிதகுமாரி (வாலாஜாபேட்டை); செபஸ்தியன் பிள்ளை ரவிகுமார் (திண்டுக்கல் அகதிகள் முகாம்); கதிர்வேலு சிவஞானசெல்வம் (திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை); அமல்ஆரோக்கியசாமி சந்திரவதனா (ஆதம்பாக்கம், சென்னை); அகநிலா (சேலையூர், சென்னை); தங்கய்யா தங்கம் (முதலியார்குப்பம், காஞ்சிபுரம்).
தேடப்படும் குற்றவாளி
இவர்கள் நீங்கலாக, இந்தியாவில் வசித்துவருவதாகக் குறிப்பிட்டு வேலுபிள்ளை ரேவாதன் என்பவரின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அவர் பயங்கரவாத வழக்குகளில் இலங்கை அரசால் தேடப்படும் குற்றவாளி என சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் அறிவித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையிடம் ஒப்படைக்குமா?
இந்தியா- இலங்கை கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் 2010, ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் இவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், இவர்களை கைது செய்து முறைப்படி இலங்கையிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும்.
உள்துறை ஆலோசனை
ஆனால், ஒரு நாட்டில் இருந்து தப்பித்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இவர்களை எந்த அடிப்படையில் இலங்கைவசம் திரும்ப ஒப்படைப்பது என்பதில் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சட்டத் துறையுடன் மத்திய உள்துறை தீவிரமாக ஆலோசித்துவருகிறது.
16 அமைப்புகளுக்குத் தடை:
தனி நபர்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் இடம்பெற்றுள்ள 16 அமைப்புகளுக்கும் இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
தமிழ் ஒருங்கிணைப்பு கமிட்டி (பிரான்ஸ்); பிரிட்டிஷ் தமிழ் மன்றம், உலக தமிழ் மன்றம் (இங்கிலாந்து); உலகத் தமிழ் இயக்கம்; கனடிய தமிழ் காங்கிரஸ், தேசிய கனடிய தமிழ் கவுன்சில் (கனடா); ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் (ஆஸ்திரேலியா); தமிழ் தேசிய கவுன்சில் (நார்வே, கிளை: ஸ்விட்சர்லாந்து).
முகவரியில்லா அமைப்புகள்:
கிளைகள், அலுவலகங்கள் இல்லாமல் செயல்படும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் வரிசையில், விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழ் மறுவாழ்வு அமைப்பு (டிஆர்ஓ என்ற பெயரில் உலகின் பல நாடுகளில் கிளை உள்ளது); தமிழ் இளைஞர் அமைப்பு (ஆஸ்திரேலியா); உலகத் தமிழ் ஒருங்கிணைப்புக் குழு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம்; தமிழ் ஈழம் மக்கள் பேரவை; உலகத் தமிழர் நிவாரண நிதியம்; தலைமையகக் குழு ஆகிய இயக்கங்களை இலங்கை அரசு அறிவித்துள்ளது.
சதி ஆலோசனை குற்றச்சாட்டு
இந்த அமைப்புகள் மீது பயங்கரவாத செயல்களுக்கு துணைபோவது, நிதி திரட்டுவது, சட்டவிரோதமாகக் கூடி இலங்கைக்கு எதிராக சதி செய்வது போன்ற குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு சுமத்தியுள்ளது. இப் பட்டியலையும் இந்தியா முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த 32 நபர்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது.