மே 18: மாபெரும் தமிழர் ஒன்றுகூடல்- வடக்கு,கிழக்கு மாகாண தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி!
வல்வெட்டித்துறை: தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை இல்லத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி தமிழர்கள் இன்று பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளனர்.
தமிழருக்கான தமிழீழ தனி நாடு கோரிய விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான யுத்தம் 2009-ம் ஆண்டு மே 18-ல் முடிவுக்கு வந்தது. இந்த இறுதி யுத்த நாட்களில் பல லட்சக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.
உலகம் முழுவதும் தமிழர்களால் மே 18-ந் தேதி இனப்படுகொலை நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன. தமிழ்நாடு உட்பட தமிழர்கள் வாழும் நிலம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இலங்கையில் தமிழர் தாயக நிலப்பரப்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இது தொடர்பாக முள்ளிவாய்க்கால் பொதுக் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2009-ல் ஈழத் தமிழினத்தை துடிக்க துடிக்க துடைத்து அழித்து ஒரு இன அழிப்பை சிறிலங்கா அரசு கொடூரமாக மேற்கொண்டது. சர்வதேசம் தடை செய்த ஆயுதங்களை இலங்கை அரசு தமிழருக்கு எதிராக பயன்படுத்தியது. இதனை நினைவுகூற மே 18-ந் தேதி முள்ளிவாய்க்காலில் ஒன்று கூடுவோம். மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து கஞ்சி பரிமாறுவோம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வல்வெட்டி துறை இல்லத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி ஒரு குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் கிழக்கு மாகாணம் பொத்துவில்லில் இருந்தும் தமிழர் தாயக நிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் முள்ளிவாய்க்கால் நோக்கி தமிழர்கள் புறப்பட்டு சென்றனர். முள்ளிவாய்க்காலில் மே 18-ந் தேதி தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வை நடத்த உள்ளனர். இலங்கை ராணுவம், போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி இந்நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.